லண்டன்: முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், லண்டனில் உள்ள லார்ட் திடலில் நடக்கும் ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்திக்க உள்ளது இந்தியா. இந்தத் திடல் இஷாந்த் சர்மாவுக்கு ராசியானது. கபில்தேவ் மற்றும் டோனியைத் தொடர்ந்து இங்கு வெற்றி பெறுவதற்கு கோஹ்லி காத்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. எட்பாஸ்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 31 ஓட்டங்களில் வென்றது.
எட்பாஸ்டன் மைதானத்தில் விளையாடிய 17 போட்டிகளில் எந்த ஆசிய அணியும் வென்றதில்லை என்ற மோசமான சாதனை தொடர்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 17 டெஸ்ட்களில் இந்தியா விளையாடியுள்ளது. அதில் 2 முறை வென்றுள்ளது. நான்கு டெஸ்ட் சமநிலையில் முடிந்தது. இங்கிலாந்து 11 முறை வென்றுள்ளது. 2014ல் நடந்த போட்டியில் 74 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகனானார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. அதனால், 9ஆம் தேதி நடக்கும் டெஸ்டில் இஷாந்த் சர்மா இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். இதுவரை 13 அணித் தலைவர்கள் தலைமையில் இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியுள்ளது. அதில் 1986ல் கபில்தேவ் தலைமையிலான அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2014ல் டோனி தலைமையிலான அணி 95 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் வென்றன. அந்த வரிசையில் கோஹ்லி தலைமையிலான அணி இடம்பிடிக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.