பெண்ணின் பாவாடைக்குள் தன் கைபேசிவழி படம் பிடித்த 27 வயது ஆடவரைக் கையும் களவுமாகப் பிடித்த 26 வயது பொறியாளர் திரு கோ டொங் என் பொதுநல உணர்வுடன் செயல்பட்டதற்காகப் பாராட்டுப் பெற்றார். பொது போக்குவரத்துப் பாதுகாப்புத் தளபத்தியத்தில் நேற்று நடைபெற்ற போலிசார் விருதளிப்பு நிகழ்ச்சியில் கோவுக்கு பொதுநல உணர்வுமிக்கச் செயலுக்கான போலிஸ் விருது வழங்கப்பட்டது.
ஜூலை 27 அன்று மார்சிலிங் எம்ஆர்டி நிலையத்தில் இருந்த மின்படிக்கட்டருகே ஓர் ஆடவர் மின்படியில் இருந்த ஒரு பெண்ணின் பின்னால் அவசரமாகச் சென்று நின்றதையும் திரு கோ பார்த்தார். வேலைக்குச் சென்றுகொண்டிருந்த திரு கோ, ஆடவர் கைபேசியைக் கொண்டு அந்தப் பெண்ணின் பாவாடைக்குள் படம் பிடித்ததைக் கவனித்துவிட்டார்.
உடனே, ஆடவரை அணுகி அவரை நிலையத்திலேயே தடுத்து வைத்துவிட்டு இன்னொருவரின் உதவியுடன் ரயில் நிலையத்தின் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தார். இதுபோன்ற பொதுநல உணர்வுமிக்க செயல்களால் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் குற்றம் நிகழாமல் இருக்கும் என்றும் பயணம் செய்வோர் எவ்வேளையிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் திரு கோவுக்கு விருதளித்த போலிஸ் உயர் அதிகாரி இவோன் எங் கூறினார்.
திரு கோவுக்கு விருதளிக் கிறார் பொதுப் போக்குவரத்து பாதுகாப்புத் தளபத்தியத்தின் தலைவர் இவோன் இங். படம்: சிங்கப்பூர் போலிஸ்