மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கிய சியாமன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றது. இருப்பினும் அந்த விமானத்தில் சென்ற 165 பேருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறினர்,
சியாமன் ஏர் நிறுவனம் சைனா சவுத்தர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். வியாழக்கிழமை நள்ளிரவுக்குச் சற்று முன்னர், பலத்த மழை பெய்த வேளையில் தரையிறங்கிய விமானம் ஓடு பாதையைவிட்டு விலகிச் சென்றதாக அதிகாரிகள் கூறினர். அந்த விமானம் தரை இறங்குவதற்கு சற்று முன்பு அப்பகுதியில் வட்டமிட்டுப் பறந்ததாகவும் இரண்டாவது முறையாக அது தரை இறங்கியதாகவும் கூறப்பட்டது. அந்த விமானத்தில் சென்ற 157 பயணிகளும் 8 விமானச் சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மணிலா விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.
ஓடுபாதையைவிட்டு விலகிய சியாமன் ஏர்லைன்ஸ் நிறுவனத் தின் 737-800 ரக விமானம். படம்: ஏஎஃப்பி