இம்மாதம் 28ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். கடந்த 50 ஆண்டுகளாக திமுக தலைவராக இருந்த கருணாநிதி இம்மாதம் 7ஆம் தேதி காலமானார். அவரது மறைவையொட்டி, வரும் 30ஆம் தேதி சென்னையில் நடக்கவுள்ள நினைவஞ்சலிக் கூட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
அதற்குமுன் கட்சியின் புதிய தலைவரை நியமித்துவிட திமுக தீர்மானித்துள்ளது. அதற்கேதுவாக, இம்மாதம் 28ஆம் தேதி திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில், இப்போது திமுக செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலின் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்படுவார். கட்சியின் மூத்த தலைவரும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் க.அன்பழகன் கட்சியின் பொதுச் செயலாளராக நீடிப்பார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவராக இருக்கும் கனிமொழி துணைப் பொதுச் செயலாளராகவும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு முதன்மைச் செயலாளராகவும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இதற்கிடையே, செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் கருணாநிதி நினைவிடத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்தவிருப்பதாகவும் அதில் ஒரு லட்சம் பேர் வரை திரளுவர் என்றும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். உண்மையான திமுக தொண்டர்கள் தன் பக்கமே உள்ளனர் என்றும் பேரணியில் அதை நிரூபிப்பேன் என்றும் அழகிரி கூறினார்.