அபுதாபி: ஆஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூவா தலையாவில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் ஆஸம் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 68 ஓட்டங்களில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக முகம்மது ஹஃபீஸ் 39 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் பில்லி ஸ்டென்லேக், ஆண்ட்ரூ டை ஆகியோர் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். இதையடுத்து, 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் அணியின் அபாரப் பந்துவீச்சு ஆஸ்திரேலியப் பந்தடிப் பாளர்களைத் திக்குமுக்காட வைத்தது. ஆஸ்திரேலியா அணி 16.5 ஓவர்களில் 89 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வியின் பிடியில் சிக்கியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.