கயானா: பெண்கள் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்திய மகளிர் வெற்றியுடன் தொடங்கியுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியாவின் நட்சத்திரப் பந்தடிப்பாளரும் அணித் தலைவருமான ஹர்மன்பிரீத் கவுர் 103 ஓட்டங்கள் எடுத்தார். கயானாவின் புரோவி டென்சில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற இந்தியா முதலில் பந்தடித்தது.
விக்கெட்காப்பாளர் தானியா பாட்டியா (9 ஓட்டங்கள்), நட்சத்திர வீராங்கனை மந்தனா (2 ஓட்டங்கள்) ஆகியோர் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினர். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் (15 ஓட்டங்கள்) நிலைக்கவில்லை. இதனை அடுத்து, ஜெமிமா ரோட்ரிக்சும் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். விக்கெட் சரிவைப் பற்றி கவலைப்படாமல் ஹர்மன்பிரீத் கவுர் பந்தை அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டார். சிக்சர்களையும் விளாசிய ஹர்மன்பிரீத் கவுர் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை உயர முக்கிய காரணமாக அமைந்தார்.
இவர்கள் நான்காவது விக்கெட்டுக்கு 134 ஓட்டங்கள் சேர்த்தனர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 59 ஓட்டங்களில் (45 பந்துகள், 7 பவுண்டரிகள்) ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நியூசிலாந்து பந்துவீச்சைச் சிதறடித்து ஓட்ட மழை பொழிந்த ஹர்மன்பிரீத் கவுர், 49 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் அனைத்துலக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார். அத்துடன் டி20 உலகக் கிண்ணத்தில் சதம் அடித்த மூன்றாவது வீராங்கனை என்ற பெருமையையும் பஞ்சாப்பைச் சேர்ந்த 29 வயது ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார். ஒரு பந்து எஞ்சியிருந்த நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் நியூசிலாந்து விக்கெட்காப்பாளரிடம் 'கேட்ச்' ஆனார்.