வாஷிங்டன்: தென்சீனக் கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பனிப்போர் ஏற்படுவதையோ அல்லது சீனாவுடன் மோதல் போக்கை பின்பற்றவோ அமெரிக்கா விரும்பவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பூசல் நீடிக்கிறது. அவ்விரு நாடுகளும் பதிலுக்கு பதில் இறக்குமதி வரியை விதித்து அதை நடப்புக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் இரு நாட்டு உறவு பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் திரு போம்பியோவும் அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஜிம் மேத்திஸும் சீன உயர் அதிகாரி யாங் ஜிசியு மற்றும் சீன தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்கியை சந்தித்து பாதுகாப்பு குறித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய திரு போம்பியோ, சீனாவின் செயல்கள் நமது இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வளப்பத்திற்கு ஆதரவாக நியாய மானதாக இருக்க வேண்டும் என்பதை அமெரிக்கா உறுதிப் படுத்திக்கொள்ள விரும்புவதாகக் கூறினார். தென்சீனக் கடல் பிரச்சினை பற்றி குறிப்பிட்ட திரு போம்பியோ, இந்த விவகாரத்தில் சீனா கடந்த கால கடப்பாடு களின்படி நடந்துகொள்ள வேண் டும் என்று வலியுறுத்தினார்.
தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு உரிமை கொண்டாடும் சீனா, அதன் கோரிக்கையை வலுப்படுத்திக் கொள்ளும் வகையில் அப் பகுதி யில் அதன் நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது. இத்தகைய செயலை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரு கிறது. தென்சீனக் கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடும் மற்ற நாடுகளும் சீனாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தென்சீனக் கடல் பகுதிக்கு கப்பல்களையும் விமானத்தையும் அனுப்புவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று சீனா கேட்டுக்கொண்டுள்ளது.