சிங்கப்பூரின் ஆளும் மக்கள் செயல் கட்சி தனது புதிய மத்திய செயற் குழுவைத் தேர்ந்தெடுத்து இருக்கிறது. அந்தக் குழுவில் நான்காம் தலைமுறைத் தலைவர்கள் முக்கிய பொறுப்புகளை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மசெகவின் மத்திய செயற்குழு உருமாறி இருப்பதன் மூலம் சிங்கப்பூரின் அடுத்தகட்ட அரசியல் புதுப்பிப்பு, முறையாகத் தொடங்கி இருக்கிறது. துணைப் பிரதமர்களான டியோ சீ ஹியன், தர்மன் சண்முகரத்னம் போன்ற மிகவும் செல்வாக்குமிக்க, அனுபவம் மிக்க தலைவர்கள் கட்சியின் புதிய செயற்குழுவில் இடம்பெறவில்லை.
புதிய செயற்குழுவின் தலைமையில் மசெக அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்கவிருக்கிறது. மசெக கூட்டமும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நேற்று நடந்தது. அந்தக் கட்சி கூட்டத்தில் சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். அதில் புதிய செயற்குழு தேர்ந்தெடுக் கப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங், உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம், சுகாதார அமைச்சர் கான் கிம் யோங், நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ, வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங்; சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, பிரதமர் அலு வலக அமைச்சர் இந்திராணி ராஜா, பிரதமர் அலுவலக அமைச்சர் இங் சீ மெங், கல்வி அமைச்சர் ஓங் யி காங், நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் புதிய செயற் குழுவுக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
இவர்களில் 12 பேர் ஆக அதிக வாக்குகளைப் பெற்றனர். தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ ஆகிய இருவரும் அதிக வாக்குகளைப் பெற்ற வர்கள் வரிசையில் 13 மற்றும் 14வது இடங்களைப் பிடித்தனர். இவர்கள் செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்டனர். குமாரி இந்திராணி ராஜாவும் திரு இங் சீ மெங்கும் குழுவிற்குப் புதியவர்கள். "அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருக்கின்றன.
"அந்தத் தேர்தலில் மசெக திட்டவட்ட மான வெற்றியைப் பெறவேண்டும். எப் போதுமே செயல்பட்டு வந்திருப்பதைப் போல சிங்கப்பூரர்களை பிளவுபடுத்தாமல் ஐக்கியப்படுத்தி தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம்," என்று கட்சிக் கூட்டத்தில் பிரதமர் திரு லீ குறிப்பிட்டார். மத்திய செயற்குழுவில் இடம்பெற்று உள்ள மாற்றங்களைக் கட்சியின் முக்கிய புதுப்பிப்பு நடவடிக்கை என்றார் அவர். நெடுங்காலமாக பதவியில் இருந்து வந்த கட்சித் தலைவர்கள் விலகிக் கொண்டதும் இதற்குக் காரணம்.
சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நேற்று நடந்த மக்கள் செயல் கட்சியின் மாநாடு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் அந்தக் கட்சியின் புதிய மத்திய செயற்குழு உறுப்பினர்கள். துணைப் பிரதமர் திரு டியோ சீ ஹியன், திரு தர்மன் சண்முகரத்னம் ஆகியோர் புதிய குழுவில் இடம்பெறவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்