கோலாலம்பூர்: 1எம்டிபி நிதி விவகாரத்தில் கோல்ட்மேன் சாக்ஸ் வங்கிக்கு சம்பந்தம் உண்டு என்பதை அந்த வங்கிக் குழுமம் ஒப்புக்கொண்டுள்ள வேளையில் அந்த வங்கி ஊதியமாகப் பெற்றுக்கொண்ட தொகையைத் திருப்பித் தருவதே நியாயம் என்று மலேசிய நிதி அமைச்சர் லிம் குவான் எங் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அந்தப் பணத்தை திரும்பப் பெற அந்த வங்கிக்கு எதிராக நெருக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்று திரு அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார். மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அந்த வங்கியிடமிருந்து மலேசிய அரசாங்கம் இழப்பீடு கோர வேண்டும் என்றும் திரு அன்வார் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
இந்நிலையில் மலேசியப் பிரதமர் டாக்டர் மகாதீரும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 'ஏமாற்றி' விட்டதாகக் கூறியுள் ளார். சிஎன்பிசி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். 1எம்டிபி நிதி முறைகேடு தொடர்பில் அமெரிக்கா, மலேசியா, மேலும் நான்கு நாடுகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி உயர் அதிகாரிகள் இருவர் மீது அமெரிக்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் கிரிமினல் குற்றச் சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே கோல்ட்மேன் சாக்ஸ் வங்கி தவறு எதுவும் செய்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் மலேசிய அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாக அந்த வங்கி தெரிவித்துள்ளது. அந்த வங்கியின் பங்குகள் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு திங்கட்கிழமை 7.5 விழுக்காடு குறைந்ததாகக் கூறப்படுகிறது.