பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப்பின் மனைவி ரோஸ்மா மன்சூரிடம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர். சரவாக் மாநில கிராமப்புற பள்ளிகளுக்கான பல மில்லியன் டாலர் மதிப்புடைய திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பில் அவர் விசாரிக்கப்பட்டதாகக் கூறப் பட்டது. வாக்குமூலம் அளிக்க அவர் நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை யகத்திற்கு வந்திருந்தார்.
ரோஸ்மாவின் உதவியாளர் ரிசால் மன்சூர் வாக்குமூலம் அளிக்க நேற்று ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு வரமாட்டார் என்றும் அவரிட மிருந்து வாக்குமூலம் ஏற்கெ னவே பெறப்பட்டுவிட்டதாகவும் ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. ரோஸ்மாவும் ரிசாலும் இன்று நேரடியாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என எதிர் பார்க்கப்படுகிறது. கோலாலம்பூரில் உள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ரோஸ்மா நிறுத்தப்படுவதற்கு முன்பு எம்ஏசிசி அதிகாரிகளால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்று செய்திகள் வெளியாகின.
சரவாக் மாநிலத்தில் உள்ள கிராமப்புற பள்ளிகளுக்கான 1.25 பில்லியன் ரிங்கிட்(S$412 மில்லியன்) மதிப்பிலான சூரிய சக்தி ஹைப்ரிட் திட்டம் தொடர்பில் ரோஸ்மா மீதும் ரிசால் மீதும் இன்று 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோஸ்மா மீது கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வரி ஏய்ப்பு உட்பட மொத்தம் 17 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.