புவர்ட்டோ ரிக்கோவில் வியாழக்கிழமை (டிசம்பர் 16) நடக்கவிருந்த இவ்வாண்டுக்கான 'மிஸ் வெர்ல்ட்' உலக அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி, தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னர் தள்ளி வைக்கப்பட்டது.
அதன் 97 போட்டியாளர்களில் 23 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது அதற்குக் காரணம்.
நிகழ்ச்சியில் பணியாற்றும் ஊழியர்கள் 15 பேருக்கும் கிருமி தொற்றியதாக 'மிஸ் வெர்ல்ட்' அமைப்பு தெரிவித்தது.
போட்டியாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு இறுதிப் போட்டியைத் தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அமைப்பு தனது அறிக்கையில் கூறியது.
மலேசியாவைப் பிரதிநிதிக்கும் அழகி லாவண்யா சிவாஜி, இந்திய அழகி மானசி ஜோஷி, இந்தோனீசியாவின் பிரிசிலியா கார்லா யூல்ஸ் உள்ளிட்டவர்களுக்குக் கிருமி தொற்றியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
லாவன்யா தனிமையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் நலமாக இருப்பதாகவும் மலேசியத் தரப்பினர் கூறினர்.
அடுத்த 90 நாள்களுக்குள் போட்டி நடத்தப்படும் என்று 'மிஸ் வெர்ல்ட்' அமைப்பு குறிப்பிட்டது.
'மிஸ் வெர்ல்ட்' உலக அழகிப் போட்டி இவ்வாண்டு 70வது முறையாக நடைபெற்று வருகிறது.