கடந்த ஆண்டு ஊழல் குறித்த புகார்கள் அதிகரித்திருந்தன. ஆனால் லஞ்ச ஊழல் புலனாய்வு மன்றத்தால் (சிபிஐபி) விசாரிக்கப்பட்ட வழக்குகள் கணிசமாகக் குறைந்துள்ளன என அம்மன்றத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2014 ஆம் ஆண்டில் பெறப்பட்ட லஞ்ச ஊழல் புகார்களின் எண்ணிக்கை 736 ஆக இருந்தது. அது கடந்த ஆண்டு 877 ஆக அதிகரித்தது. அவற்றில் 132 புகார்களே விசாரணைக்கு ஏற்புடையதாக இருந்தன. இது 2014 ஆம் ஆண்டில் 136 ஆக இருந்தது. இந்த ஆண்டில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட 132 விசாரணைகளில் 11 விழுக்காடு பொதுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்புடையவை. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நான்கு விழுக்காடு குறைவு. எஞ்சியவை அனைத்தும் தனியார் துறையைச் சார்ந்தவை. இந்தப் புள்ளி விவரம் நேற்று நடைபெற்ற மன்றத்தின் நகரும் கண்காட்சித் தொடக்கவிழாவில் அறிவிக்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றினார். அனைத்துலக அளவிலான ஊழல் குறைந்த நாடுகளின் தர வரிசைப்பட்டியலில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சிங்கப்பூரிடம் கற்றுக்கொள்வதற்கு பல நாடுகளும் அவற்றின் அதிகாரிகளை இங்கு அனுப்பி வைக்கின்றன. குறைந்த அளவிலான லஞ்ச, ஊழல் குற்றங்களை சிங்கப்பூர் கொண்டிருப்பதற்கு மூன்று முக்கிய காரணிகள் உள்ளதாக பிரதமர் லீ கூறினார். சக்திவாய்ந்த அரசியல் தலைமைத்துவம்; ஊழலுக்கு எதிரான வலுவான, விரிவான கட்டமைப்பு; லஞ்ச ஊழலைப் புறக்கணிக்கும் சமூகம் ஆகிய மூன்று முக்கிய காரணிகளால்தான் லஞ்ச ஊழல் குறைந்த நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது என்றார் பிரதமர் லீ.
சிங்கப்பூரின் தொடக்கம் ஊழலற்றதாக இருக்க வேண்டும் என்பதை சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் இயூவும் அவரது குழுவினரும் அறிந்திருந்தனர் என்றார் பிரதமர் லீ. தகுதியற்ற, ஊழல் அரசாங்கத்தால் மொத்த இயக்கமே நிலைகுலைந்து போகக்கூடும். ஊழல் என்னும் புற்றுநோய் பரவி ஒட்டுமொத்த இயக்கத்தையும் செயலிழக்கச் செய்துவிடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் என்றார் பிரதமர் லீ.
"ஊழலற்ற ஆட்சியைத் தருவதைக் குறிக்கும் வகையில் திரு லீ குவான் இயூவும் அவரது மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களும் நாட்டின் முதல் பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் புனிதமான வெள்ளை நிற ஆடைகளை உடுத்தி வந்திருந்தனர். அத்துடன் அந்த நிற ஆடையையே கட்சியின் சீருடையாக்கினர். எப்போதும் ஊழலற்ற தூய்மையான அரசாங்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்னும் அவர்களது திடமான தீர்மானத்தையே இந்த வெள்ளை நிறம் காட்டுகிறது. அதுவே அன்றுமுதல் சிங்கப்பூரின் வழிகாட்டுதலாகவும் ஆகி விட்டது.
சிங்கப்பூரர்கள் ஊழலற்ற முறையையே விரும்புகின்றனர். சில வேளைகளில் காரியங்களைச் செயல்படுத்த கையூட்டுப் பெறுதலையோ கொடுப்பதையோ அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்," என்றார் பிரதமர் லீ. லஞ்சம், ஊழல் போன்றவற்றை எதிர்கொள்ளும்போது சிங்கப்பூரர்கள் புலனாய்வு மன்றத்திற்குப் புகார் அளிக்கின்றனர். "லஞ்ச ஊழலுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான சட்டத்தில் பயமோ பாரபட்சமோ இல்லை என்பதில் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார் திரு லீ.