'இந்தியா காய்ச்சல்' தொடங்கி யதில் இருந்து இந்தியாவின் அளப்பரிய ஆற்றலில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வரும் ஆண்டுகளில் இந்தியா உயர் வளர்ச்சி விகிதங்களுடன் எழுச்சி பெறும் என்று கூறினார் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங். எனினும் பொருளியலாளர்கள் சொல்வதுபோல் இடைவெளி அதிகமாக இருக்கும். வளப்பமான எதிர்காலத்துக்கு, இந்தியா பொருளியல் மறுமலர்ச்சி, மேம்பாடு, நவீன மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக தனது மனிதவளத்தின் திறன் பயிற்சியிலும் மேம்பாட்டிலும் இந்தியா அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றார் அவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையின் இணை ஆசிரியர் (வெளி விவகாரம்) ரவி வெல்லூர், 58 எழுதிய 'இந்தியா ரைஸிங்' என்ற நூலை நேற்று வெளியிட்டு உரையாற்றினார் திரு கோ. இரு நாடுகளின் மிகச் சிறந்த உறவைக் குறிப்பிட்டு பேசிய திரு கோ, அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையேயான அரசதந்திர உறவுகளின் 50 ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டதையும் திரு லீ குவான் இயூவின் இறுதிச் சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றதையும் சுட்டினார்.