புக்கிட் பாத்தோக் தனித் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. மசெக வேட்பாளர் முரளிதரன் பிள்ளை, 48, தம்மை எதிர்த்துப் போட்டி யிட்ட சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளரான 53 வயது டாக்டர் சீ சூன் ஜுவானைவிட 5,286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திரு முரளிதரன் பிள்ளை 14,428 (61.21%) வாக்குகளையும் டாக்டர் சீ சூன் ஜுவான் 9,142 (38.79%) வாக்கு களையும் பெற்றனர். வெற்றி பெற்ற திரு முரளிக்கும் அவருக்கு வலுவான ஆதரவைத் தந்த புக்கிட் பாத்தோக் வாக்காளர்களுக்கும் பிரதமர் லீ சியன் லூங் தமது வாழ்த்து களைத் தெரிவித்துக்கொண்டார்.
கடந்த 2015 பொதுத் தேர்தலின்போது புக்கிட் பாத்தோக் தொகுதியில் மசெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மசெகவின் டேவிட் ஓங். அவர் 73% வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிஜக வேட்பாளர் சதாசிவம் வீரைய்யா 26.4% வாக்கு களையும் சுயேச்சை வேட்பாளர் சமிர் சலிம் நெஜி 0.6% வாக்குகளையும் பெற்றனர். இருப்பினும், திருமணத்திற்குப் பிந்திய கள்ள உறவு காரணமாக தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து கடந்த மார்ச் 12ஆம் தேதி அவர் விலகினார். தமது நடத்தைக்காக அவர் புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களிடம் மன்னிப்பும் கோரினார்.
இதையடுத்து, சென்ற மாதம் 20ஆம் தேதி அதிபர் டோனி டான் கெங் யாம் புக்கிட் பாத்தோக்கில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்க, அன்றே இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பைத் தேர்தல் துறை வெளியிட்டது. ஐந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதும் வேட்புமனுத் தாக்கல் நாளான ஏப்ரல் 27ஆம் தேதியன்று திரு முரளி, டாக்டர் சீ தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. இதனால், மசெக=சிஜக இடையே நேரடிப் போட்டி நிலவியது. இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ஒன்பது நாட்களாகக் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பிரசார ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. ஒன்பது வாக்களிப்பு மையங்களில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
வெளிநாடுகளில் வாழும் வாக்கு அளிக்கத் தகுதி உள்ள 52 புக்கிட் பாத்தோக் வாக்காளர்களுக்காக பத்து சிங்கப்பூர் தூதரகங்களில் வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன. நண்பகல் 12 மணியளவில் 47%, அதாவது 12,303 பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர். மாலை 5 மணியளவில் இந்த எண் ணிக்கை 21,566 ஆக, அதாவது 83% ஆக உயர்ந்தது. இறுதியாக, வாக்குப்பதிவு முடிவ டைந்த நேரமான இரவு எட்டு மணி அளவில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 24,192 (94.03%). அவற்றில் செல்லாத வாக்குகள் 622. பின்பு வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் முத்திரையிடப்பட்டு வாக்க ளிப்பு நிலையங்களில் இருந்து கெமிங் தொடக்கப் பள்ளி, புக்கிட் பாத்தோக் உயர்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.
மசெக ஆதரவாளர்கள் புக்கிட் பாத்தோக் மசெக கிளை அலுவலகம் முன்பும் சிஜக ஆதரவாளர்கள் புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கிலும் நேற்று மாலை முதலே கூடத் தொடங்கினர். வாக்குப்போக்கை எடுத்துரைக்கும் முன்னோடி எண்ணிக்கையில் திரு முரளி 61% வாக்குகளையும் டாக்டர் சீ 39% வாக்குகளையும் பெற்றனர். இதற்குமுன் நான்கு முறை டாக்டர் சீ தேர்தலில் போட்டியிட்டும் ஒருமுறைகூட 35 விழுக்காட்டிற்கு அதிகமான வாக்கு களைப் பெற்றதில்லை. புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் அவர் பெற்ற 38.79%% வாக்குகளே இதுவரை நடந்த தேர்தல் களில் அவருக்குக் கிடைத்த அதிகபட்ச வாக்கு விழுக்காடு.