இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி இத்தாலிய நிறுவனங்கள் சிங்கப்பூரில் தடம்பதிக்கச் செய்ய ஆவன செய்யும் வகையில் சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமின் இத்தாலியப் பயணம் அமையும் எனக் கூறப்படுகிறது. முப்படைகளைச் சேர்ந்த மரியாதைக் காவலணி புடைசூழ, இத்தாலிய அதிபரின் அதிகாரபூர்வ இல்லமான பலாஸ்ஸே„ டெல் குய்ரினாலில் சிங்கப்பூர் அதிபர் டோனி டான் கெங் யாமுக்கு அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டோனி டானுடன் அவரது துணைவியாரும் உடன் இருந்தார். ரோமில் உள்ள ஏழு மலைகளின் உச்சியில் அமைந்திருக்கும் 16வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்த இல்லத்தின் மீது சிங்கப்பூரின் தேசியக் கொடி ஏற்றப்பட்டதுடன் அங்கு சிங்கப்பூரின் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
இந்த வரவேற்பை அதிபர் டோனி டானுக்கு அளித்த இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டாரெல்லா அதிபர் டோனி டானையும் சந்தித்து உரையாடினார். அரசியல், பொருளாதாரம் கலா சாரம், கல்வி, ஆராய்ச்சி, தற்காப்பு போன்ற துறைகளில் பிணைப்பை வலுப்படுத்தவும் இருதரப்பு உறவுகளைக் கட்டிக்காக்கவும் இரு நாடுகளின் தலைவர்கள் மறு உறுதியளித்தனர். சிங்கப்பூர், இத்தாலியின் முன்னுரிமைப் பங்காளி என்று இத்தாலிய அதிபர் மட்டாரெல்லா செய்தியாளார்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். விவாதத்தின்போது தீவிரவாத எதிர்ப்பு, குடிபெயர்தல் ஆகிய பிரச்சினைகளைக் கையாளுவதில் அனைத் துலகச் சமூகம் தலையிட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டதாக இத்தாலி அதிபர் சொன்னார்.