நியூசிலாந்தில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த 30 வயது சிங்கப்பூரர் மோசமான விபத்து ஒன்றை ஏற்படுத்தியதற்காக நான்கு மாதங்களுக்கு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன் 200 மணி நேர சமூகப் பணிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளார். லியூ வெய் கியோங் எனும் அந்த ஆடவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன் அவருக்கு $25,400 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி பெண் நண்பர் ஒருவருடன் நியூசிலாந்தின் சவுத் ஐலாண்டுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர் டொயோட்டா கோரொல்லா கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணம் செய்தபோது நான்கு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணமானார். அந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி கிரெய்க் ஆலன் சேம்பர்ஸ், 39, மரணமடைந்தார். மணிக்கு 120கி.மீ. வேகத்தில் காரை ஓட்டிச் சென்றதாக லியூ மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
காரை ஓட்டிச் சென்ற லியூ களைப்பினால் தூங்கிவிட்டதாகவும் என்ன நேர்ந்ததென்று நினை வில் இல்லை எனவும் குறிப்பிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. விபத்தில் மாண்டுபோனவரின் மனைவி நிகோலா நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்து, தமது பிள்ளை தந்தையை இழந்ததற்கும் தாம் விதவையானதற்கும் லியூ மட்டுமே காரணம் என்று குறிப்பிட்டதோடு தமது குழந்தை தந்தையின் இழப்பால் பெரிதும் வாடுவதாகவும் மிகுந்த மன வேதனையுடன் கூறினார்.
வாடகை டொயோட்டா கார் ஒன்றை நியூசிலாந்தில் ஓட்டிச் சென்ற சிங்கப்பூரர் லியூ வெய் கியோங் இரட்டை மஞ்சள் கோடுகளைத் தாண்டி சில வாகனங்களை முந்திச்செல்ல விழைந்தபோது இரண்டு கார்கள், எதிர்த்திசையில் பயணம் செய்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதினார். படம்: @GUNNY_NZ/INSTAGRAM