சிங்கப்பூர் குடிமக்கள், சிங்கப்பூர் வாழ் மக்கள் ஆகியோரின் வேலையின்மை விகிதம் இவ்வாண்டு முதல் காலாண்டில் சரிந்ததாக மனிதவள அமைச்சு நேற்று வெளியிட்ட தொழிலாளர் அறிக்கை தெரிவித்தது. ஆனால், தொழிலாளர் அணியில் இளவயதினர் குறைவாகச் சேர்ந்த அதேவேளையில், வேலையின்மையால் வயது மூத்த ஊழியர்கள் தொடர்ந்து அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். வேலைகளின் வளர்ச்சியும் சென்ற காலாண்டில் மெதுவடைந்தது. ஆட்குறைப்பு விகிதம் முந்திய காலாண்டின் உச்சத்திற்குப் பிறகு கடந்த காலாண்டில் குறைந்திருந்தது. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளின் முதல் காலாண்டுகளோடு ஒப்பிடுகையில் இவ்வாண்டு முதல் காலாண்டின் ஆட்குறைப்பு விகிதமே ஆக அதிகம்.
குடிமக்களின் வேலையின்மை விகிதம் முந்திய காலாண்டின் 3 விழுக்காட்டிலிருந்து 2.6 விழுக்காடாகவும், சிங்கப்பூர்வாழ் மக்களின் வேலையின்மை விகிதம் 2.9 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாகவும் குறைந்தது. ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பரில் இருந்து இந்தக் காலாண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி 1.9 விழுக்காடாக இருந்தது. இவ்வாண்டு மார்ச் மாதத்தில், 50,800 சிங்கப்பூர் குடிமக்கள் உள்பட, சுமார் 60,400 சிங்கப்பூர்வாழ் மக்கள் வேலையில்லாமல் இருந்தனர். கடந்த டிசம்பரில் 57,900 சிங்கப்பூர் குடிமக்கள் உள்பட 64,600 சிங்கப்பூர்வாழ் மக்கள் வேலையில்லாமல் இருந்தனர்.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் கடந்த டிசம்பரில் இருந்து இந்தக் காலாண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி 1.9 விழுக்காடாக இருந்தது என்று மனிதவள அமைச்சு கூறியது. கோப்புப்படம்