காஷ்மீரில் நடைபெற்று வரும் கலவரத்தை முன்னிட்டு அமர்நாத் புனிதப் பயணம் சென்ற பக்தர்கள் சுமார் 15,000 பேர் காஷ்மீரை நோக்கிச் செல்ல முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனை வரும் ராணுவ முகாம், கோயில், பள்ளி என பல இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 5,000 தமிழக பக்தர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர்களை மீட்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்கு போதிய உணவு, தண்ணீர், கழிப்பிட வசதிகள் கிடைக்காமல் அவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழக பக்தர்களில் பெரும்பாலான முதியோர்கள் உள்ளதால், அவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இவர்கள் புனிதப் பயணத்தைத் தொடரவும் முடியாமல் தமிழகம் திரும்பி வரவும் முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், அங்கு கைத்தொலைபேசி, இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தங்களது உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமலும் அவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு விரைந்து செயல்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழக பக்தர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் அமர்நாத் புனித நடைப் பயணம் தொடங்கியது. அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை இந்த புனித நடைப் பயணம் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்பதற்காக உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் காஷ்மீரில் குவிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அங்கு 22 வயது பயங்கரவாதி பர்ஹன் முஸாஃபர் வானி சுட்டுக் கொல்லப்பட்டான். அதற்குக் கண்டனம் தெரிவித்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.
இதனால் தற்காலிகமாக அமர்நாத் புனித நடைப் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாநிலத்தின் சில இடங்களில் 144 ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அமர்நாத் புனிதப் பயணம் சென்றுள்ள பக்தர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள் ளனர். இதற்கிடையே காஷ்மீர் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரி வித்துள்ள அம்மாநில முதல்வர் மெகபூபா, விரைவில் அங்கு அமைதி திரும்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். ஜம்மு = காஷ்மீரில் பாதுகாப்புப் படை யினரின் துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு பதற்றம் நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு மேலும் பல இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அங்கு சுற்றுலா சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமைதி திரும்பி யுள்ளதாகவும் பக்தர்கள் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள பகுதி பகுதியாக அனுமதிக்கப்படுவதாகவும் காஷ்மீர் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று 25,000 பக்தர்கள் பால்டல், பகல்கம் ஆகிய இடங்களிலிருந்து 1,741 வாகனங்களில் ஜவகர் சுரங்கத்தைக் கடந்ததாக காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார். ஜூலை 2ஆம் தேதி முதல் 1,28,946 பக்தர்கள் அமர்நாத் புனிதக் குகையை அடைந்து வழிபாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ராணுவ முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்கள். காஷ்மீரின் வடக்கு தெற்குப் பகுதிகளில் உள்ள பகல்கம், பால்டல் போன்ற இடங்களில் உள்ள ராணுவ முகாம்களில் பெரும்பாலான பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். படம்: இந்திய ஊடகம்