தாய்லாந்தின் கடலோர நகரமான பட்டாணியிலுள்ள சதர்ன் ரிவர் வியூ ஹோட்டலில் நேற்று முன் தினம் இரவு இரண்டு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 30 பேர் படுகாயமடைந்தனர். அண்மையில் தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் ஏழு இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதில் 4 பேர் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் நிறைவுபெறுவதற்கு முன்னரே மீண்டும் குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரையிலும் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. இருப்பினும் தாய்லாந்து பாதுகாப்புத் திறனாளர்கள் சிலர், இது தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் செயல்பட்டு வரும் கிளர்ச்சியாளர்கள் வேலையாக இருக்கலாம் என்றும் இதுபோன்ற குண்டு வெடிப்புகளை அவர்கள் நிகழ்த்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறுகின்றனர். தாய்லாந்தின் தற்காப்பு அமைச்சர் பிரவிட் வோங்சுவான் கூறுகை யில், "செவ்வாய்க்கிழமை இரவு பட்டாணியில் நிகழ்ந்த இரட்டைக் குண்டு வெடிப்புக்கும் அண்மையில் ஏழு மாகாணங்களில் நடந்த தாக்குதலுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை," என்று பேங்காக் அரசு மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். முதல் குண்டுவெடிப்பு ஹோட்டலுக்குப் பின்புறம் இருக்கும் வாகனம் நிறுத்தும் பேட்டையில் நிகழ்ந்தது. இதில் யாருக்கும் காயமில்லை.
தாய்லாந்தின் பட்டாணி நகரில் ஒரு ஹோட்டலின் முகப்பில் குண்டு வெடிப்பால் உருக்குலைந்துபோன வாகனம் ஒன்றைக் காவல்துறையினர் பார்வையிடுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்