தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று காலை பாய லேபார் வே, காலாங் வே வட்டாரங்களில் பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டது. உள்ளூரில் 'ஸிக்கா'கிருமித் தொற்றுக்கு இலக்கானதாக முன்தினம் உறுதி செய்யப்பட்ட 26 பேரில் ஐவர் இவ்விரு வட்டாரங்களில் வாழ்ந்தவர்கள் அல்லது வேலை செய்தவர்கள். கொசு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்களை அழிக்க வாரிய அதிகாரிகளும் குத்தகையாளர்களும் பாய லேபார் வே கட்டடம் 120ன் சுற்றுவட்டாரத்தில் பூச்சிக்கொல்லி மருந்தடித்தனர். அப்பகுதியிலிருந்த சாக்கடைகளில் பூச்சிக்கொல்லி மருந்துப்பொடி தூவப்பட்டது. கொசுக்களைத் துடைத் தொழிக்க அப்பகுதியிலிருந்த வீடுகளுக்கும் அவர்கள் வருகையளித்தனர். பாய லேபார் வே கட்டடம் 121ல் குடியிருக்கும் 58 வயது மெல்வின் சுவா, அக்கம்பக்கத்தில் வாழும் நலிவுற்ற முதியோரின் நலன் குறித்து அக்கறைப்படுவதாகக் கூறினார்.
ஸிக்கா தொற்று ஆரம்பத்தில் பரவிய அல்ஜுனிட் கிரசன்ட், சிம்ஸ் டிரைவ் வட்டாரங்களுக்கு அப்பால் பாய லேபார் வேயிலும் இப்போது பரவியிருக்கிறது. கொசுக்களால் பரப்பப்படும் ஸிக்கா பொதுவாக அதிக பாதிப் பை ஏற்படுத்தாது. ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது ஸிக்கா தொற்றினால், கருவிலேயே குறைபாடுகள் ஏற்படக்கூடும். நேற்றைய பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுற்றுப்புற, நீர்வள, சுகாதார மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிட்டார். ஸிக்கா தொற்றைத் தடுக்கக்கூடிய வழிவகைகளை வயதான குடியிருப்பாளர்களிடம் தெரியப்படுத்தவும் அவர் உதவினார். இந்த வட்டாரத்தில் ஏற்கெனவே டெங்கி பரவல் இருப்பதாக டாக்டர் கோர் தெரிவித்தார். ஆகஸ்ட் 24ஆம் தேதியிலிருந்து பூச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.