ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டில், சிக்லாப் செண்டருக்கு எதிரே நேற்று அதிகாலையில் நடந்த சாலை விபத்தில் 25 வயது ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டின் மத்தி யில் உள்ள இரும்புத் தடுப்பில் அவரது கார் மோதியதால் விபத்து நேர்ந்தது. அப்போது கனத்த மழை பெய்து கொண்டிருந்தது. மவுண்பேட்டன் ரோட்டை நோக் கிச் சென்று கொண்டிருந்த அந்தக் கார் ஈரமாக இருந்த சாலையில் சறுக்கி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. காரில் சிக்கிக் கொண்ட அந்த ஆடவரைச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் இரும்பை வெட்டும் கருவியைக் கொண்டு ஓட்டுநர் பகுதியை அறுத்து அவரை விடுவித்தனர். ஆனால், சம்பவ இடத்திலேயே அவர் மாண்டு விட்டார் என்று மருத்துவ அதிகாரிகளால் உறுதிப் படுத்தப்பட்டது. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தரை வீட்டில் வசித்து வரும் 47 வயது எலன், பலத்த இரைச்சல் கேட்டு தான் விழித்துக் கொண்டதாகத் தெரி வித்தார். விபத்து நடந்த பிறகு அந்த வட்டாரத்தில் இரண்டு மணி நேரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விசாரணை தொடர்கிறது.
கனத்த மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பதால், கார் சாலையில் சறுக்கி இரும்புத் தடுப்பில் மோதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. படம்: திரு யாப்