புதுடெல்லியிலிருந்து தமிழவேல்
சிங்கப்பூர், இந்தியா மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் இந்தியாவின் சிறப்புமிக்க வளர்ச்சிப் பாதையில் எங்கெல்லாம் முடியுமோ அங்கு சிங்கப்பூர் தொடர்ந்து பங்களிக் கும் என்றும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் அதி காரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் லீ, நேற்று புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். அதன்பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர். கூட்டுறவை மேலும் வலுப்படுத்த சிங்கப்பூரும் இந்தியாவும் கடப்பாடு கொண்டுள்ளன என்றும் அறிவுசார் நகரங்கள், திறன்வளர்ச்சி போன்ற பல துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட விரும்புகிறோம் என்றும் திரு லீ கூறினார். கடந்த 2012ல் தாம் இங்கு வருகை புரிந்ததில் இருந்து இந்தியா பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது என்றும் அதற்கு பிரதமர் மோடியின் துடிப்பான தலைமைத்துவமும் தெளிவான தொலை நோக்குமே காரணம் என்றார் திரு லீ.
இந்திய மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் (650 மில்லியன்) 25 வயதுக்கு உட்பட்டோர் என்ற திரு லீ, வரும் 2022ஆம் ஆண்டிற்குள் 400 மி. இளை யர்களின் திறன்களை வளர்க்க அந்நாடு திட்டமிட்டிருப்பதையும் சுட்டினார். "பொருளியல் உருமாற்றத்திற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக் கும் அதன் இளையர்களுக்குத் தகுந்த திறன்களை அளிப்பதற்கும் சிங்கப்பூர் ஆதரவு அளிக்கும்," என்று திரு லீ குறிப்பிட்டார். சிங்கப்பூர்=இந்திய உறவைப் பறை சாற்றிய திரு மோடி, திரு லீ சியன் லூங் இந்தியாவின் நண்பர் எனக் குறிப்பிட் டார். மேலும் சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் லீ குவான் இயூ சிங்கப்பூருக்கு மட்டுமல்லாமல் ஆசியாவிற்கே வழிகாட்டி யாகத் திகழ்ந்தார் என்றும் முன்னாள் அதிபர் அமரர் எஸ்.ஆர்.நாதனின் இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று என்றும் திரு மோடி சொன்னார். மற்ற நாடுகள் நாளை செய்ய நினைப் பதை சிங்கப்பூர் இன்றே செய்துவிடும் என்று புகழ்ந்து, சிங்கப்பூரின் துடிப்பையும் புத்தாக்கத்தையும் அவர் பாராட்டினார்.
புதுடெல்லியில் நேற்று இந்தியப் பிரதமர் மோடியை (வலது) சந்தித்துப் பேசிய பிரதமர் லீ, இன்று ராஜஸ்தானின் உதய்ப்பூருக்குச் செல்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்