உதய்ப்பூரிலிருந்து தமிழவேல், துணை செய்தி ஆசிரியர்
சிங்கப்பூரின் உதவியுடன் ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் நேற்று சுற்றுப்பயணத்துறையில் திறன் பயிற்சி மையம் ஒன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங், ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே ஆகியோர் பிரதமர் லீ சியன் லூங் முன்னி லையில் இந்தச் சிஇடிடி திறன் பயிற்சி நிலையத்தைத் திறந்து வைத்தனர். இந்தப் பயிற்சி நிலையம் கடந்த ஆண்டு செய்யப்பட்ட சிங்கப்பூர்= இந்தியா உத்திபூர்வ பங்காளித்துவத்தின் கீழ் செய்யப்பட்ட திறன் மேம்பாட்டுக் கூட்டணியின் ஓர் அங்கமாகும். முதலமைச்சர் வசுந்தரா கடந்த 2014ஆம் ஆண்டு சிங்கப்பூர் வந்து சென்ற பிறகு சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகச் சேவைகளின் ஆலோசனை பிரிவுக்கு ராஜஸ்தான் அரசு அழைப்பு விடுத்தது.
உதய்ப்பூரில் உள்ள அரசு தொழில்துறை பயிற்சி நிலையத்தைத் தொழில்நுட்பக் கல்வியில் முன்னோடி நிலையமாக மாற்றுவதற்கு ராஜஸ்தான் அரசு சிங்கப்பூரின் உதவியை நாடியது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகச் சேவைகளின் ஆலோசனைப் பிரிவு நடத்திய தேவை அடிப்படையிலான ஆய்வில் ராஜஸ்தானுக்குச் சுற்றுப்பயணத்துறை சேவைகள் துறையில் ஆள்பலத் தேவை இருப்பது கண்டறியப்பட்டது. உதய்ப்பூரில் நேற்று திறக்கப்பட்ட உன்னத சுற்றுப்பயணத்துறை பயிற்சிக்கான திறன் பயிற்சி நிலையம் முழுமையாகச் செயல்படத் தொடங்கியவுடன் ஆண்டுக்கு 480 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க முடியும். இங்குள்ள 36 பயிற்சியாளர் களுக்குச் சிங்கப்பூர் தொழில் நுட்பக் கல்விக் கழகச் சேவை களின் ஆலோசனைப் பிரிவு பயிற்சியும் அளிக்கும்.
புதிய பயிற்சி நிலைய வளாகத்தில் அமைச்சர் ஓங் இரு உருத்திராட்ச மரக்கன்றுகளை நட் டார். உதய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் அரசுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சுற்றுப்பயணத்துறை, நகரக் கட்டமைப்புத் துறை கூட்டுறவிலும் சுற்றுப்பயணத்துறை, சேவைகள் துறையில் வளங்களை உருவாக்கும் திட்டத்திலும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.