உயர் வருவாய் ஈட்டும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோரையும் உள்ளடக்கும் வகையில் வேலைவாய்ப்புச் சட்டத்தில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. வேலைச் சந்தையில் இந்தப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், வேலைவாய்ப்புச் சட்டம் $4,500 வரை சம்பளம் பெறுவோரை மட் டுமே உள்ளடக்கும் என்ற பிரிவு நீக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தப் பிரிவைச் சேர்ந்தோருக்கு குறைந் தபட்ச ஆண்டு விடுப்பு நாட்கள், சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு, மருத்துவமனை விடுப்பு, தவறாக வேலைநீக்கம் செய்யப் பட்டதற்கான இழப்பீடு போன்ற அனுகூலங்களை இவர்கள் பெற முடியும்.
தற்போது $4,500 வரை மாத வருவாய் பெறும் 290,000 நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகளையும் இப்பிரிவைச் சேராத ஊழியர்களையுமே இச்சட்டம் பாதுகாக்கிறது. பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, கூடுதலாக 430,000 நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் இதன் மூலம் பயன்பெறுவர். வேலைவாய்ப்பு திருத்தச் சட்ட மசோதாவை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து அடுத்த மாதம் விவாதிக்கப்படவுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதவாக்கில் மாற்றங்களை அறிமுகப் படுத் துவது இலக்கு. இந்த மசோதா நீண்டகாலமாக ஆலோசிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 2012ல் தொடங்கப்பட்ட கருத்துச்சேகரிப்பு, ஆய்வுகளைத் தொடர்ந்து முன்னாள் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே இந்த மாற்றங்களை மார்ச் மாதம் அறிவித்தார்.