முவாமினா
லிட்டில் இந்தியாவில் பொங்கல் கொண்டாட்டம் நேற்று ஆடு, மாடுகளின் வருகையுடன் களைகட்டத் தொடங்கியது. விக்னேஷ் பால் பண்ணையைச் சேர்ந்த ஒரு காளை மாடு, மூன்று பசுமாடுகள், இரண்டு கன்றுக்குட்டிகள், இரண்டு ஆடுகள் நேற்று முதன் முதலாக லிட்டில் இந்தியாவில் உலா வந்தன. மாலை 4.30 மணியளவில் சிறப்பு லாரியில் கேம்பல் லேன், கிளைவ் ஸ்திரீட் சந்திப்புக்குக் கொண்டுவரப்பட்ட அந்த கால்நடைகள் மேள தாளத்துடன் வர வேற்கப்பட்டன. அவற்றில் ஒரு பசுமாடும் கன்றுக்குட்டியும் இந்திய மரபுடைமை நிலையத்திற்குள் சுற்றிவிட்டு வர அதற்குள் அவற்றைச் சுற்றி ஒரு சிறிய கூட்டம் கூடிவிட்டது. அவை அங்குள்ள பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. பின்பு கால்நடைகளுக்கு கடைக்காரர்கள் மாலையிட்டு சிறப்பித்தனர். அங்கிருந்து, அனைத்து கால்நடைகளும் சிராங்கூன் சாலையை நோக்கி நடைப் பயணம் மேற்கொண்டன. அவை செல்லும் வழியெல்லாம் மக்கள் கால்நடைகளுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து உற்சாகத்தில் மூழ்கினர். அதன் பின்னர் அவை சிராங்கூன் ரோடு வாயிலாக, ஹேஸ்டிங்ஸ் சாலையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.