கடந்த 95 ஆண்டுகளாக மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழ் வாசகர்களுக்குச் சேவையாற்றி வந்த தமிழ் நேசன் நாளிதழ் நேற்றுடன் விடைபெற்றுக் கொண்டது.
"நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட இந்த நாளிதழின் கடைசி நாளில் ஆசிரியராக இருந்ததும் 50 பேர் வரை வேலை இழந்ததும் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது," என்று வேதனைப்பட்டார் நாளிதழின் ஆசிரியர் திரு கே. பத்மநாபன், 59.
"நேற்று முன்தினம் எங்கள் எல்லாருக்குமே மிகவும் சோகமான நாள். ஆனாலும் எங்கள் கடமையைச் செய்தோம்," என்ற அவர், "அடுத்த எங்கள் நிலைமை என்ன என்பதைவிட, பல காலகட்டங்களைக் கடந்துவந்துள்ள தமிழ் நேசன் நிறுத்தப்பட்டதுதான் ஊழியர்கள் அனைவருக்குமே மிகுந்த வேதனையைத் தருகிறது.
"என்றாலும், நேசன் மீண்டும் நடத்தப்படும், 100வது ஆண்டு விழா கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது," என்று உறுதியோடு கூறினார் திரு பத்மநாபன். செலவுகள் அதிகரித்தது, வருமானம் குறைந்தது, வாசகர் எண்ணிக்கை குறைந்தது போன்ற காரணங்களால் நாளிதழை நிறுத்த வேண்டியதாகிவிட்டது என நேற்றைய கடைசி இதழில் தமிழ் நேசன் குறிப்பிட்டிருந்தது.