மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டம் போன்றவற்றிற்கு ஒதுக்கப்படும் நிதியை உற்று நோக்காமல் ஒவ்வோர் ஆண்டும் அரசாங்கம் செய்யும் மொத்த சமூகச் செலவினத்தைப் பார்க்குமாறு நேற்று முன்தினம் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கூறினார். தேசிய செய்தியாளர் நிலையத்தில் வரவுசெலவுத் திட்டம் குறித்து சனிக்கிழமை நிகழ்ந்த கருத்தரங்கில் திரு சான் இவ்வாறு பேசினார்.
ஒவ்வொரு தலைமுறையினரையும் கருத்தில் கொண்டு அவ்வப் பொழுது இத்தகைய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. ஆனால் இத்திட்டங்கள் ஓய்வுக் காலத்தில் இருப்போருக்கு நீடித்த நிலைத்தன்மை வாய்ந்தவை அல்ல என்று தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டியோ, வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் விமர்சித்திருந்தார். இதன் தொடர்பில் அமைச்சர் சான் இவ்வாறு பதிலளித்தார்.
சென்ற திங்கட்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஓர் அங்கமான மெர்டேக்கா தலை முறைத் தொகுப்புத் திட்டம், சமூகத்தில் பாதிப்படையக்கூடிய ஒரு பகுதியினரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என் றார். 1950களில் பிறந்தோருக்கு உருவாக்கப்பட்டுள்ள மெர்டேக்கா தலைமுறைத் தொகுப்புத் திட்டத் திற்கு $6.1 பில்லியன் இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 60 முதல் 69 வயதுக்குட்பட்ட கிட்டத் தட்ட 500,000 சிங்கப்பூரர்களின் சுகாதாரப் பராமரிப்புச் செலவுகள் குறையும். இருப்பினும் இனி வரும் அனைத்து தலைமுறையினரும் மன நிம்மதியையும் பாதுகாப்பு உணர்வையும் பெறப் பொதுநலக் கொள்கைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் இணைப் பேராசிரியர் டியோ. இது தொடர்பில் மக்களின் கட்டமைப்புக்கான ஆதரவை அரசாங்கம் நல்குவதாக வும் சமூகச் செலவினமான இதுவே வரவுசெலவுத் திட்டத்தில் 40%க்கு மேல் பங்கு வகிப்பதாகவும் திரு சான் விளக்கினார்.
அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுப்பதைவிட கூடுதல் வளங் களை சிங்கப்பூருக்குப் பங்களித் தோர், குறிப்பாக அவர்களில் உதவி அதிகம் தேவைப்படு வோருக்கு இந்தத் தொகுப்புத் திட்டம் பெரிதும் கைகொடுக்கும் என்றார் அமைச்சர் சான்.