ராணுவப் பயன்பாட்டுக்குரிய சிலவகை துப்பாக்கிகளுக்கு எதிரான புதிய தடை ஒன்றை நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் அறிவித்திருக்கிறார்.
கிறைஸ்ட்சர்ச் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிர் இழந்ததை அடுத்து இந்தத் தடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் மாண்டவர்கள் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி, இந்தோனீசியா, ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
நியூசிலாந்தின் துப்பாக்கிச் சட்டங்களில் உள்ள பலவீனத்தை இந்தச் சம்பவம் காட்டுவதாகத் திருவாட்டி ஆர்டன் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் வியாழக்கிழமை ( மார்ச் 21) தெரிவித்தார்.
நிறைய குண்டுகளை நிரப்பக்கூடிய வேறு சில துப்பாக்கிகளும் தடை செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.
இதற்கிடையே, தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் நாளை திறக்கவுள்ளது. அங்கு தற்போது பழுதுபார்ப்பு மற்றும் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. துப்பாக்கிச்சூட்டில் மாண்டோருக்கு அந்நாட்டின் தேசிய வானொலிச் சேவையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.