பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் பெய்த கனமழையால் குறைந்தது பத்து பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோரைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கத்தைவிட மிக கனமான இந்த மழை திங்கட்கிழமை மாலை பெய்யத் தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை நீடித்தது. இதனால் மரங்கள் சாய்ந்து கார்கள் மீதும் மக்கள் மீதும் விழுந்தன. அத்துடன், வீதிகளில் ஆறு போல ஓடி வழிந்த மழைநீர், கார்களை இழுத்துச் சென்றதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.
குன்றுகள் இருந்த பகுதிகளில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் புதையுண்ட ஒரு காரில் இருந்த மூன்று பேர் பலியாயினர். வீடு ஒன்று தரைமட்டமானதில் இரண்டு பெண்கள் மாண்டதாகத் தீயணைப்புத் துறை தெரிவித்தது.