உலகின் ஆகப் பெரிய ஜனநாயகமாக வர்ணிக்கப்படும் இந்தியாவின் பொதுத்தேர்தல் இன்று தொடங்குகிறது. இது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக எதிர்நோக்கும் பொதுத் தேர்தல். அவர் மீண்டும் பிரதமராகும் கனவு இந்தியாவின் 900 மில்லியன் வாக்காளர்களின் கைகளில் உள்ளது.
வாக்களிப்பு இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு) தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்றுகொண்டிருப்பதைக் காட்டும் படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன. இந்த முதற்கட்டத்தில், இந்திய நாடாளுமன்றக் கீழவையின் 543 இடங்களில் 91 இடங்களுக்கான வாக்களிப்பு நடந்தேறும்.
திரு மோடி தொடர்ந்து பிரதமராக விளங்குவதே பெரும்பாலான வாக்காளர்களின் விருப்பம் என்று கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக ராய்ட்டரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இருந்தபோதும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் 48 வயது ராகுல் காந்தி செல்வாக்கில் உயர்ந்துள்ளதால் 68 வயது திரு மோடிக்கு இந்தத் தேர்தல் சவால்கள் மிகுந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தப் பொதுத்தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும்.
வன்முறை ஏற்படும் அபாயம் மிக அதிகம் என்பதால் பாதுகாப்புப் படையினர் எந்நேரமும் உச்ச விழிப்பு நிலையில் உள்ளனர்.
இன்று முதல் மே மாதம் 19ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கட்சிகளும் வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் தங்கள் கைவரிசையைக் காட்டவுள்ளனர். முடிவுகள் மே 23ஆம் தேதி வெளிவரும்.
இந்த முதற்கட்ட வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட 142 மில்லியன் வாக்காளர்கள் கலந்துகொள்வர்.