புதிதாகக் கட்டப்பட்ட ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்குப் பொதுமக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். அதற்காக முன்கூட்டியே பதிவு செய்திருந்த அரை மில்லியன் பேர் இன்று பிற்பகல் ஒரு மணி முதல் அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி வரை அங்கு செல்வர். வழிகாட்டிகளைக் கொண்ட சுற்றுலாக்களில் அவர்கள் கலந்துகொண்டு புதிய வளாகத்தின் சிறப்பம்சங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்வர்.
ஒன்றாம் முனையத்திற்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜுவல் அடுத்த புதன்கிழமை முதல் அனைவருக்கும் திறக்கப்படும். இதனை உருவாக்குவதற்காக 1.7 பில்லியன் வெள்ளி செலவிடப்பட்டது. சாங்கி விமான நிலையத்தின் எதிர்காலத்திற்கு இது தேவையான முதலீடு என வர்ணிக்கப்பட்டுள்ளது.
"சிங்கப்பூரிலுள்ள உலகத்தர சுற்றுலாத்தளங்களின் வரிசையில் ஜுவல் சாங்கி கூடுதலாகச் சேர்க்கப்படும் மதிப்புமிக்க அம்சம்," என்று ஜுவல் சாங்கி விமான நிலையத்திற்கும் சாங்கி விமான நிலையக் குழுமத்திற்கும் தலைவராக உள்ள திரு லீ சியாவ் ஹியாங் தெரிவித்தார்.
"சிங்கப்பூருக்கு அல்லது சிங்கப்பூர் வழியாகச் செல்லவிருக்கும் அனைத்துப் பயணிகளையும் ஜுவலுக்கு வரவேற்பதில் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்," என்றார் அவர்.
50 மீட்டர் நீள தொங்குபாலம், 40 மீட்டர் உயரமான உள்புற அருவி, 2,500 மரங்களையும் 100,000 புதர்களையும் கொண்டுள்ள ஐந்து மாடித் தோட்டம் உள்ளிட்டவை ஜுவலின் சிறப்பம்சங்கள். 135,700 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஜுவலில் 280க்கும் மேற்பட்ட கடைகள், ஒரு ஹோட்டல், விளையாட்டு வசதிகள் ஆகியவையும் உள்ளன.