12ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட பிரம்மாண்டமான 'நோட்ர டேம்' தேவாலயத்தின் மேற்பகுதி தீப்பிடித்ததில் அதன் கூரை எரிந்துபோனது. இருந்தபோதும் கற்களால் செய்யப்பட்ட அந்தக் கட்டடத்தின் உள்ளமைப்பு இடிந்து விழாமல் இருப்பதை உறுதி செய்ததாகத் தீயணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பிரான்சின் தலைநகர் பாரிசிலுள்ள இந்தத் தேவாலயம் எரிந்த சம்பவம் அந்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மாலை நேரத்தில் கட்டடம் எரிந்துகொண்டிருந்தபோது அதன் மணி கோபுரம் ஒன்று இடிந்து தரைமட்டமாவதைத் தடுக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடியதாகத் தகவல் வெளிவந்தது. இந்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தீயணைப்பாளர் ஒருவர் கடுமையாகக் காயமடைந்தார்.
"எங்கள் அனைவரின் அங்கமாக இருக்கும் இந்தத் தேவாலயம் எரிவதைக் கண்டு வேதனை அடைகிறேன்," என்று அந்நாட்டின் அதிபர் இமானுவெல் மக்ரோன் டுவிட்டரில் தெரிவித்தார். எரிந்த தேவாலயம் சீரமைக்கப்படும் என்றும் அதற்காக வெளிநாட்டிலிருந்து கட்டடக் கலை நிபுணர்கள் வரவழைக்கப்படுவர் என்றும் அவர் உறுதி கூறினார். இந்த முயற்சிக்காக "குச்சி" சொகுசு பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பிரான்சுவா-ஹொன்ரி பினால்ட் 100 மில்லியன் யூரோ வழங்குவதாக உறுதி அளித்திருக்கிறார்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜெர்மானியப் பிரதமர் ஏங்கலா மெர்க்கல், சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்கள் அனுதாபத்தை வெளிப்படுத்தினர்.