இலங்கையில் நடந்த வெடிப்புச் சம்பவங்களில் பலியானோருக்கான தேசிய துக்க தின அனுசரிப்பு இன்று நடந்து வருகிறது. ஈஸ்டர் தினத்தில் நடந்த அந்தத் தாக்குதலில் 310 பேர் உயிரிழந்தனர்; 500 பேர் காயமடைந்தனர். மாண்டோரில் 32 பேர் வெளிநாட்டினர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கக் கட்டடங்களிலுள்ள கொடிகள் இன்று அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. மக்கள் மெளன அஞ்சலி செலுத்தி இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர்.
தாக்குதலின் தொடர்பில் நாற்பதுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாண்டோருக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கியுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான செயின்ட் அந்தோணி தேவாலயத்தில் பலர் இன்று கூடி தங்கள் பிரார்த்தனைகளைச் செலுத்தினர்.
காணாமல் போன தங்களது உறவினர்களைக் கண்டுபிடிக்க இலங்கை மக்கள் மருத்துவமனைகளிலும் சவக்கிடங்குகளிலும் தேடி வருகின்றனர். உயிரிழந்தோர் பலரின் பெயர்கள் இன்னும் அடையாளங்காணப்படவில்லை.