ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தோரின் அதிகாரபூர்வ எண்ணிக்கையை 359லிருந்து 253க்கு இலங்கை குறைத்திருக்கிறது. சம்பவ இடங்களில் காணப்பட்ட உடற்பாகங்கள் யாருடையது என்பதை உறுதி செய்வது மிகவும் கடினமாதலால், மாண்டோரின் எண்ணிக்கை துல்லியமாகக் கணக்கெடுக்கப்படவில்லை என்று அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்திருக்கிறார். சவக்கிடங்குகள் அளித்திருந்த தவறான தகவல்கள் இதற்குக் காரணம் என்று திரு விஜயவர்தன கூறினார்.
அரசாங்கம் வெளியிடும் எந்த எண்ணிக்கையுமே குத்துமதிப்பீடுதான் என்று இலங்கையின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநர் அனில் ஜெய்சிங்க தெரிவித்தார். "மாண்டோர் எண்ணிக்கை 250 ஆகவும் இருக்கலாம், 260 ஆகவும் இருக்கலாம், என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. உடற்பாகங்கள் நிறைய உள்ளதால் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவது கடினம்," என்று அவர் கூறினார்.
மூன்று தேவாலயங்கள், நான்கு ஹோட்டல்கள் மீதான அந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தபோதும், அது தக்க நேரத்தில் செயல்படத் தவறியுள்ளது. அரசாங்கத்தின் மேல்நிலை அதிகாரிகளுக்கு இடையிலான போட்டியும் பகையும் பாதுகாப்பு ஒத்துழைப்பைக் குலைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன்பேரில் பாதுகாப்பு அமைச்சர் ஹேமசிரி ஃபர்னாண்டோ பதவி விலகியுள்ளார். இருந்தபோதும், இந்தியா கொடுத்த தகவலின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்ததாக அவர் கூறுகிறார். தனது வழிநடத்தலில் செயல்படும் அமைப்புகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகியது தவிர, தமது தரப்பில் எந்தக் குளறுபடியும் ஏற்படவில்லை என்றார் திரு ஃபர்னாண்டோ.
இலங்கையில் பீதி அதிகரித்துள்ள நிலையில், சந்தேக நபர்களின் பெயர்களையும் புகைப்படங்களையும் போலிசார் வெளியிட்டுள்ளனர்.