அதிகரிக்கும் போட்டித்தன்மையைக் கட்டுப்படுத்த 'கம்ஃபர்ட் டெல்குரோ' நிறுவனம், டாக்சி ஓட்டுநர்களுடன் இணைந்து லாபத்தைப் பகிர்வதற்கான திட்டம் ஒன்றைத் தொடங்க உள்ளது.
இந்தத் திட்டத்தின்படி டாக்சி ஓட்டுநர்களுக்குக் குறைந்த வாடகைக் கட்டணங்கள் வழங்கப்படும். பதிலுக்கு அந்த ஓட்டுநர்கள் தங்களது வருவாயிலிருந்து குறைந்தது 15 விழுக்காட்டுத் தொகையை 'கம்ஃபர்ட் டெல்குரோ'விடம் கொடுக்கவேண்டும்.
நான்கு ஆண்டுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தப்பட்ட 'ஹியுண்டாய் ஐ40' டாக்சிகளின் ஒற்றை ஓட்டுநர்கள் விருப்பத்தின்பேரில் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்தால் அவர்களது தினசரி டாக்சி வாடகைக் கட்டணம் 105 வெள்ளியிலிருந்து 68 முதல் 78 வெள்ளி வரை குறையும். அப்போது அவர்கள் தங்கள் வருவாயிலிருந்து 15 விழுக்காட்டை 'கம்ஃபர்ட் டெல்குரோ'வுடன் பகிரவேண்டும்.
இந்தத் திட்டத்தை விவரிக்கும் கடிதங்கள் 1,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் அனுப்பி வைக்கப்படும். திட்டம் வெற்றியடைந்தால் மற்ற ஓட்டுநர்களுக்கும் அதனை விரிவுபடுத்துவது குறித்து நிறுவனம் யோசிக்கும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி யாங் பான் செங் தெரிவித்தார்.