சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பழுது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது புதுடெல்லி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க வேண்டியிருந்தது.
எஸ்கியூ406 விமானத்தின் நீரழுத்த முறையில் (hydraulic system) ஏற்பட்ட பழுதினால் இவ்வாறு நடந்தது என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பேச்சாளர் கூறியதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்தது. திட்டமிடப்பட்டதைவிட அரை மணி நேரம் தாமதமாக விமானம் இரவு 8.20 மணிக்குத் தரையிறங்கியது.
விமானத்தின் முன்முனைப் பகுதியில் நீரழுத்தக் கசிவுக்கான (hydraulic leak) அறிகுறிகளை விமானத் தொழில்நுட்பர்கள் கண்டறிந்ததாக விமான நிறுவனப் பேச்சாளர் கூறினார். ஆயினும், எந்தக் கட்டத்திலும் விமானத்தில் இருந்த 203 பயணிகளும் 25 பணியாளர்களும் ஆபத்தில் இல்லை என்றும் அவர் சொன்னார்.
இந்தச் சம்பவத்தால் விமான ஓடுபாதை கிட்டத்தட்ட 18 நிமிடங்களுக்கு மூடப்பட வேண்டியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.