சிங்கப்பூரின் ஒரே சொத்தான அதன் மக்கள், உழைப்புக்கு ஏற்றவர்களாக, காலத்துக்குத் தோதானவர்களாக, தொழில்நுட்பம் சாரந்தவர்களாக, நோய்நொடி இல்லாதவர்களாக, புத்தாக்கமிக்கவர்களாக, எந்தச் சூழலையும் சமாளிக்கும் வகையில் மாற்றங்களுக்கு ஏற்ப உடனே மாறிக்கொள்பவர்களாக இருக்கவேண்டும் என்பதே இலக்கு. இந்த இலக்கு நிறைவேற வேண்டுமானால் சிறு வயதிலிருந்தே இவற்றுக்கான உடலுறுதியும் மனஉறுதியும் மக்களிடையே நிலைப்பட வேண்டியது அவசியம்.
இதைச் சாதிக்க ஏற்ற வகையில் இங்கு போதிய நிலப்பரப்பு இல்லாத போதிலும் பாலர்கள் முதல் பெரியவர்கள், முதியவர்கள் வரை எல்லாரையும் முக்காலத்துக்கும் ஏற்றவாறு பக்குவப்படுத்தும் வாய்ப்புகளுக்கும் வசதிகளுக்கும் ஊக்குவிப்புகளுக்கும் பற்றாக்குறையோ பஞ்சமோ சிங்கப்பூரில் இல்லை.
சிங்கப்பூரர்கள் கச்சிதமானவர்களாக, கட்டொழுங்குமிக்கவர்களாக, உடலில் ஊளைச்சதையுடன் பூமிக்குப் பாரமாக இல்லாதவர்களாக இருப்பதை உறுதிப்படுத்தவே இளம் வயதிலேயே அவர்களுக்கு 'வெளிப்புற சாகசப் பள்ளி' என்ற ஓர் ஏற்பாடும் கட்டாய ராணுவப் பயிற்சியும் நெருங்காலமாக அமலில் இருந்து வருகின்றன.
இந்த வெளிப்புற சாகசப் பள்ளி, கல்வியில் முன்னேறும் மாணவர்கள் உடல், மனஉறுதியையும் பெற்று இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் களின் படிப்புடன் பிணைந்ததாக இடம்பெறுகிறது.
இளையர்கள் மலை, மடு, காடு, போன்ற உலகின் பல்வேறு சூழல்களையும் பல சவால்களையும் சந்தித்து அவற்றில் இருந்து மீண்டுவரும் அனுபவம் பெற நாட்டில் இயற்கையாக வசதிகள் இல்லை என்றாலும் அத்தகைய சூழல்களைச் செயற்கையாக இந்தப் பள்ளி நம் இளையர்களுக்கு ஓரளவுக்கு உருவாக்கித்தருகிறது.
உபின் தீவில் இருக்கும் இப்போதைய வெளிப்புற சாகசப் பள்ளி வளாகம் 9 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இப்போது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 14,000 மாணவர்கள் இந்த நிலையத்தின் செயல்திட்டங்களில் ஈடுபட்டு வாழ்க்கையில் பல சவால்களைச் சமாளிக்கும் உடல், மன ஆற்றலைப் பலப்படுத்திக்கொள்கிறார்கள். இருந்தாலும் வருங்காலத்தைப் பார்க்கையில் இது போதாது என்பதற்காக அரசாங்கம் இப்போதே ஒரு புதிய வெளிப்புற சாகசப் பள்ளிக்கு ஏற்பாடு செய்கிறது.
அந்தப் புதிய வெளிப்புற சாகசப் பள்ளி கோனி தீவில் 12 ஹெக்டேர் பரப்பளவில் $250 மில்லியன் செலவில் 2020 ஆண்டு வாக்கில் செயல்படும் என்று 2016 வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பூலாவ் சிராங்கூன் என்றும் குறிப்பிடப்படும் கோனி தீவு 133 ஹெக்டேர் பரப்பளவுள்ளது. அது சிங்கப்பூரின் வடகிழக்குக் கடற்கரைக்கு அருகே பொங்கோல் நகருக்குள்ளாக அமைந்திருக்கும் ஒரு தீவு.
மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் செயல்பட்டு சமாளிக்கவேண்டிய சவால்களை ஏற்படுத்தித் தரக்கூடிய செயல்திட்டங்களும் வசதிகளும் எப்படிஎப்படி எல்லாம் அந்தத் துணிகரச்செயல் பள்ளியில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி முடிவு செய்ய சிங்கப்பூர் உலகத்தையே உற்றுநோக்கி ஆராய்ந்து வருகிறது. புதிய வெளிப்புற சாகசப் பள்ளியில் ஆண்டுக்கு 45,000 இளை யர்கள் ஈடுபாடு கொண்டு இருப்பார்கள்.
உலகில் இப்போது பெரியவர்கள் எட்டு பேரில் ஒருவர் ஊளைச்சதையுடன் பருமனாக இருக்கிறார் என்றும் 2025ல் ஐவரில் ஒருவர், உடலில் அனாவசிய சதையுடன் இருப்பார் என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இந்த 2016ஆம் ஆண்டில் 24 முதல் 35 வரை வயதுள்ளவர்களில் 34% விழுக்காட்டினர் தங்கள் 65 ஆவது வயதில் சர்க்கரை நோயாளிகளாக இருப்பார்கள் என்று அண்மைய ஆய்வுகள் அபாயச் சங்கு ஊதுகின்றன.
சிறார்கள், இளையர்களிடையே உடல் பருமன் கூடிவருவதே இதற்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிப்பிள்ளைகளிடம் 2013ல் 11% ஆக இருந்த உடல் பருமன் பிரச்சினை 2014ல் 12% ஆகிவிட்டது. இத்தகைய ஒரு சூழலில் வெளிவந்துள்ள அரசாங்கத்தின் புதிய வெளிப்புற சாகசப் பள்ளி அறிவிப்பு, சிங்கப்பூரில் உடல் பருமன் பயத்தைத் தணிக்கக்கூடிய சரியான அருமருந்தாகப் பார்க்கப்படுகிறது.
அந்த மருந்து, சிங்கப்பூர் மக்கள் கட்டுடல் கொண்டு, உடலுறுதி, மனஉறுதியுடன் பொருளியலுக்கு உந்துசக்தி யாக, உழைப்புச் சச்தியாக இருப்பதை உறுதிப்படுத்த உதவும் என்று உறுதியுடன் நம்பலாம்.