இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகம் தனது தண்ணீர்த் தேவைக்கு அதனைச் சுற்றியுள்ள கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் நதிகளை நம்பித்தான் இருக்கிறது. நதி நீர் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு அண்டை மாநிலங்கள் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால், நதி நீர் பிரச்சினை மாநிலங்களுக்கிடையே தீர்க்கப்படாத பிரச்சினையாக பூதாகாரமாகிக்கொண்டே வருகிறது. இதில் பெரும் பிரச்சினையாக இருப்பது காவிரி நீர்ப் பிரச்சினை.
இந்த ஆண்டு காவிரி நீர் திறந்துவிடப்படாமல் தமிழகம் நீதிமன்றத்துக்குச் சென்று, 15,000 கன அடி நீரை 10 நாட்களுக்கு அளிக்குமாறு உச்சநீதிமன்றம் கூறி யதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.
நியாயமாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மூன்று மாதங் களில் தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரின் அளவு 94 டி.எம்.சி. (1 டி.எம்.சி என்பது ஒரு பில்லியன் கன அடி). இதில் கால்வாசி தண்ணீர்தான் இப்போது திறந்து விடப்பட்டுள்ளது. அதற்குத்தான் போராட்டம்.
காவிரிப் பிரச்சினை பல ஆண்டு பிரச்சினை. ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும் 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்திலும் ஏற்பட்ட பஞ்சத்தில் லட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதைத் தடுக்கும் எதிர்காலத் திட்டத்துடன் மைசூரில் கிருஷ்ணராஜசாகர் அணையும் தமிழகத்தில் மேட்டூர் அணையும் கட்டப்பட்டன.
இதன் விளைவாக 1892, 1924ஆம் ஆண்டுகளில் காவிரி நீர் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 1924 ஒப்பந்தம் 1974ல் காலாவதி நிலையில், காவிரியின் துணைநதி களான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அணைகள் கட்டி காவிரி நீரை தனி உடைமையாக்கியது கர்நாடாகா. பிரச்சினையைத் தீர்க்க 1990ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. அதிலும் பல பிரச்சி னைகள்.
கடைசியாக-- 2007ல் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி பற்றாக்குறை இல்லாத ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று காவிரியில் ஓடும் சராசரி அளவான 740 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும். பற்றாக்குறை ஆண்டுகளில் எவ்வளவு தண்ணீர் குறைகிறதோ அதற்கேற்ப இதே வீதத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ஆனால் காவிரியின் முக்கியமான நான்கு அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்தால் மட்டுமே உபரி நீரை தமிழகத்துக்குத் திறந்து விடுவோம் என்று கர்நாடகம் முரண்டுபிடிப்பதுதான் இப்போது முதல் பிரச்சினை.
இரண்டாவது பிரச்சினை, தண்ணீரின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளபோதும் தமிழ்நாட்டில் நீராதாரங்கள் அதிகரிக்கப்படாததுடன், இருக்கும் நீர்நிலை களும் பேணப்படாமல் பாழ்பட்டுக் கிடப்பது. காவிரி நீரைச் சேமிக்கப் புதிதாக 400 ஏரி, குளங்களைக் கர்நாடக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் ஆறுகளும் ஏரிகளும் மாசடைவதும் தூர்க்கப்பட்டு குடியிருப்புகள் உருவாக்கப்படுவதும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதில் தண்ணீர் பிரச்சினை அரசியல் ஆக்கப்படு வதுதான் மேலும் வேதனை தரும் விஷயம். மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை உணர்வுரீதியாகத் தூண்டி விட்டு அதில் லாபம் சம்பாதிப்பதில் மத்திய, மாநில கட்சிகள் குறியாக உள்ளன. எப்போதெல்லாம் காவிரி பிரச்சினை கிளம்புகிறதோ அப்போதெல்லாம் கர்நாடக தமிழர்களின் வாழ்க்கை ஆபத்துக்கு உள்ளாகிறது.
இந்தியாவின் நதிகளை தேசிய உடைமையாக்கி அவற்றை இணைத்து எல்லா மாநிலங்களும் பயன்பெறும் வகையில் நதிநீர் இணைப்புத் திட்டமே மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் பிரச்சினைக்குத் தீர்வாக அமை யும். ஆனால், அது உடனடியாகச் சாத்தியப்படாது.
இந்த நிலையில், சட்டப்படியான உரிமைகளுக்காக போராடுவது ஒருபுறம் என்றால் மறுபுறம் நீர்நிலைகளைத் தூய்மையாக்குவது, வீணாகக் கடலில் சேரும் ஆற்றுநீரையும் மழை நீரையும் சேகரிக்க நீர்நிலைகளை அமைப் பது, தண்ணீர் மறுபயன்பாடு, அதிகளவில் நீரை சேமிக்கும் விவசாய வழிமுறைகளுக்கு மாறுவது போன்றவை தான் தமிழகத்தின் நீண்டகால நலன்களுக்கு ஏற்றது.
நீர்வளத்தைப் பெருக்கவும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகளைத் தமிழகம் மேற்கொண்டே ஆக வேண்டும்.