உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பார்க்கையில் ஆறாவது ஆகப்பெரிய பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 1991ல் இந்தியா பொருளி யலை தாராளமயமாக்கி உலகுக்குத் தன் கதவுகளைத் திறந்துவிட்டது. அது முதல் அந்த நாடு ஆண்டுதோறும் 6=7% வளர்ச்சி கண்டு வருகிறது. மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி விகிதங்களை வைத்துப் பார்க்கையில் ஒரு நாட்டின் பொருளியல் 2% வளர்ந்தாலே அது வளர்ச்சி என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை அதன் பொருளியல் குறைந்தபட்சம் 7 விழுக்காட்டுக்கும் அதிகமாக வளர்ந்தால்தான் அந்த நாடு மில்லியன் கணக்கான தன் மக்களை ஏழ்மைப் பிடியில் இருந்து மீட்க முடியும்.
இப்படிப்பட்ட தேவை இருக்கையில், கடந்த 2014 ஜனவரி முதல் மார்ச் வரைப்பட்ட காலாண்டில் நாட்டின் பொருளியல் 5.3% தான் வளர்ந்தது. அப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். அந்தச் சூழலில், "பொருளியலை வலுப்படுத்துவேன். அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவேன்," என்று வாக்குறுதி அளித்து தேர்தலில் வென்று பிரதமராக 2014 மே மாதம் நரேந்திர மோடி பதவி ஏற்றார்.
மோடி ஆட்சியில் பொருளியல் வளரத் தொடங்கியது. என்றாலும் 2016ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 9.1% ஆக இருந்த வளர்ச்சி, 2017 ஏப்ரல் முதல் ஜூன் வரைப்பட்ட மூன்று மாதங்களில் 5.7% ஆகக் குறைந்து விட்டது. அனைத்துலக பண நிதியம்கூட இந்தியப் பொருளியல் 2017ல் இந்தியா முன்பு கணிக்கப்பட்டதைவிட 0.5% குறைவாக 6.7%தான் வளர்ச்சி காணும் என்றது. இந்த நிலைக்கு மோடி அரசாங்கம் நடைமுறைப்படுத்திய செல்லா நோட்டு நடவடிக்கையும் ஜிஎஸ்டி எனப்படும் பொருள், சேவை வரியும்தான் காரணம் என்று மோடியின் பாஜக கட்சியினர் உட்பட பலரும் ஓங்கி குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
இருந்தாலும் இந்த நடவடிக்கைகள் அவசியமானவை என்றும் சிரமங்கள் தற்காலிகமானவைதான் என்றும் இந்தியப் பொருளியல் வலுவான அடிப்படையுடன் நன்கு மேம்பட்டு வருகிறது என்றும் பிரதமர் தரப்புடன் அனைத் துலக பண நிதியமும் உத்தரவாதம் அளித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியப் பொருளிய லில் சில அறிகுறிகள் தெரியத் தொடங்கி இருக்கின்றன. பணவீக்கம் மெதுவடைகிறது. ஏற்றுமதிகள் சூடுபிடிக்க தொடங்கி இருக்கின்றன. தொழில்துறை உற்பத்தி பெருகத் தொடங்கி இருக்கிறது.
இந்த அறிகுறிகள் மிகவும் வரவேற்கத்தக்கவையாக இருக்கும் அதே வேளையில் இந்தியப் பொருளியலில் அதிக முதலீடுகளை இடம்பெறச் செய்து புதிய வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டிய அவசர அவசியம் மோடி அரசுக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது. வரும் 2019ல் நடக்கவேண்டிய நாடாளுமன்றத் தேர் தலும் அதற்கு முன்பாகவே நடக்க இருக்கும் குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில தேர்தல்களும் இவற்றை பாஜகவுக்கு வாழ்வா, சாவா என்ற நிலைக்கு கொண்டுசென்று இருக்கின்றன என்பதை பிரதமர் மோடி தரப்பு உணர்ந்து கொண்டு இருக்கும் என்று திட்டவட்டமாக நம்பலாம். பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது அவர் முக்கியமான 30 சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டார். அவற்றில் ஒன்பது, முழுமையாக நிறைவேற்றப்பட்டு உள்ளன. 13 அரை குறையாக உள்ளன. இதர எட்டு திட்டங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தெரிகிறது.