சிங்கப்பூர் சமூகம் மூப்படைந்து வருகிறது. மக்கள் இப்போது முன்பைவிட அதிக காலம் வாழ்கிறார்கள். அவர்களின் சராசரி ஆயுட் காலம் 2040ஆம் ஆண்டு வாக்கில் 85.4 ஆண்டுகளாக இருக்கும் என்று கணிக் கப்பட்டிருக்கிறது.
ஒரு நாட்டின் மக்கள்தொகை மூப்படைந்தால் சுகாதாரப் பராமரிப்புக்கான தேவை கூடும். இதற்கு ஏற்ப மருத்துவ முறைகள் வேண்டும். வேலையிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் முதுமைக் காலத்தில் செலவிட பணம் வேண் டும், வசிப்பதற்கு வீடும் தேவை.
இந்த எல்லா தேவைகளும் நிறைவேறும் வகையில் தொலைநோக்கு ரீதியில் முன்ன தாகவே திறம்பட திட்டமிட்டால் ஒரு சமூகம் கண்ணியமான முறையில் மூப்படைய முடியும் என்பதை மனதில் வைத்து, நம் அரசாங்கம் பலதரப்பட்ட திட்டங்களை நடப்புக்குக் கொண்டு வந்துள்ளது; கொண்டு வரும்.
இந்த முயற்சிகளையொட்டி, தேசிய வளர்ச்சி அமைச்சும் மனிதவள அமைச்சும் வீடுகள் தொடர்பில் விதிமுறைகளில் மாற்றங் களை இம்மாதம் அமல்படுத்தின.
மத்திய சேம நிதியைப் பயன்படுத்தி, அல் லது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வீட்டுக் கடனைப் பெற்று வீடுகள் வாங்கு வோரையும் புதிய விதிகள் கட்டுப்படுத்தும்.
சிங்கப்பூரர்களின் மாறிவரும் தேவைகள், மக்களின் நீடிக்கும் ஆயுட்காலம் ஆகியவற் றைக் கருத்தில் கொண்டுள்ள புதிய விதிகள், ஒரு வீட்டின் குத்தகைக் காலத்தில் எந்த அளவு எஞ்சி இருக்கிறது என்பதில் ஒருமித்த கவனத்தைச் செலுத்துவதற்குப் பதிலாக, உரிமையாளர் ஆயுட்காலம் முழுவதும் குடி யிருக்க அவருக்கு வீடு இருக்கவேண்டும் என்பதில் ஒருமித்த கவனம் செலுத்து
கின்றன.
நடப்பில் இருந்த விதிகளின்படி, ஒரு வீட் டின் எஞ்சிய குத்தகைக் காலத்துக்கு ஏற்ப மத்திய சேம நிதியைப் பயன்படுத்தலாம். அதாவது ஒரு வீட்டின் எஞ்சிய குத்தகைக் காலம் 60 ஆண்டுகள் என்றால் அந்த வீட்டை வாங்க கூடினபட்ச மத்திய சேம நிதித் தொகை அனுமதிக்கப்படுகிறது.
அந்த வீட்டின் எஞ்சிய குத்தகைக் காலம் 60 ஆண்டுகளுக்கும் குறைவு என்றால், அந்த வீட்டை வாங்குவோரின் வயதும் எஞ் சிய குத்தகைக் காலமும் சேர்ந்து குறைந்த பட்சம் 80 ஆக இருந்தால் அவர் மத்திய சேம நிதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
புதிய விதிகளின்படி, பழைய வீட்டை வாங்க மத்திய சேம நிதியில் இருந்து அதிக தொகையைப் பயன்படுத்தலாம்.
ஒருவர் பயன்படுத்தக்கூடிய மொத்த மத் திய சேம நிதி என்பது, வீட்டை வாங்கு வோரில் ஆக இளையவராக இருக்கும் ஒரு வரை, அவருக்கு 95 வயதாகும் வரை எஞ் சிய குத்தகைக் காலம் உள்ளடக்குமா என்ப தைப் பொறுத்ததாக இருக்கும்.
வீட்டின் எஞ்சிய குத்தகைக் காலம் 20 ஆண்டுகள்கூட இல்லை என்றால் மத்திய சேம நிதியைப் பயன்படுத்த முடியாது.
இத்தகைய புதிய விதிகளின் மூலம் அர சாங்கம் நாட்டு உருவாக்கத்தில் பொது வீட மைப்புக்குப் புதிய ஒரு மேம்பட்ட பங்கை வழங்கி இருக்கிறது.
அதாவது முதிய சிங்கப்பூரர்கள் கடைசி வரை குடியிருக்க அவர்களுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடும் சேர்ந்து இருக்கும் என்பது இந்தப் புதிய விதிகளின் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
அரசாங்கம் 'சேர்ஸ்' எனப்படும் ஒரு ஒட்டுமொத்த மேம்பாட்டு திட்டத்தை அறி வித்தபோது பெரும்பாலான வீடமைப்பு வளர்ச் சிக் கழக அடுக்குமாடி வீடுகளுக்கான குத் தகைக் காலம் முடிந்ததும் அவை அரசாங் கத்திடமே திரும்பிவிடும் என்று தெரிவித்து இருந்தது.
ஆகையால் குறைந்த குத்தகைக் காலத் துடன் கூடிய வீடுகளை வாங்கும்போது விவேகமாக நடந்துகொள்ளும்படி மக்களை அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
நீண்ட எதிர்காலத்திற்கு திட்டமிடவேண் டிய இளம் தம்பதியர், வீடு வாங்க முற்படும் போது இதை மனதில் வைக்கவேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
எல்லாருக்கும் வீடு என்பதே பொது வீட மைப்புத் திட்டத்தின் முக்கியமான நோக்கம்.
சிங்கப்பூரர்கள் தாங்கள் வசிக்கும் வீட் டின் குத்தகைக் கால அளவைவிட அதிக காலம் வாழ்வார்கள் என்றால் இத்தகைய ஒரு நிலவரத்திற்குச் சரியான தீர்வைக் காண வேண்டியது அவசியமாகிறது.
அரசாங்கத்தின் புதிய கொள்கைகள் இந்தத் தீர்வை இலக்காகக் கொண்டு இருப்ப தாகவேத் தெரிகிறது. கடைசிவரை வீடு தொடர்ந்து வரும் என்ற உத்திரவாதத்தை முதிய சிங்கப்பூரர்களுக்கு புதிய கொள்கை கள் வழங்குகின்றன.