உலகிலேயே சிங்கப்பூரருக்குத்தான் ஆயுள் அதிகம் என்று 2017 ஆம் ஆண்டின் நிலவரம் தெரிவிக்கிறது. அவர்கள் சராசரியாக 84.8 ஆண்டுகள் வாழ்கிறார்கள். இதில் அவர்கள் ஜப்பானியரை விஞ்சிவிட்டார்கள். ஆயுளில் மட்டுமல்ல, சராசரி சிங்கப்பூரர் நல்ல உடல் நலத்தோடு வாழ்வதும் அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரர்கள் சராசரியாக 74.2 ஆண்டு கள் நலமோடு வாழ்கிறார்கள் என்றாலும் உடல்நலமின்றி அவர்கள் வாழும் காலமும் கூடிவிட்டது. 10.6 ஆண்டு காலம் மக்கள் இயலாமையுடன் காலம் கழிக்கிறார்கள்.
இவை எல்லாம் அமெரிக்காவில் இருக்கும் ‘உடல்நல அளவீட்டு மற்றும் மதிப்பீட்டுக் கழகம்’ என்ற அமைப்பு சிங்கப்பூரின் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளன.
ஒரு பக்கம் ஆயுள் அதிகரித்து இருக் கிறது. மறுபக்கமோ உடல்நலமில்லாமல் மூப்பு காரணமாக ஏற்படக்கூடிய நோய்களோடு காலம் தள்ளவேண்டிய ஆயுளும் கூடியுள்ளது.
மக்களுக்கு எவ்வளவு வசதி இருந்தாலும் ஆயுள் அற்பம் என்றால் அதில் புண்ணியம் இல்லை. ஆயுள் அதிகம் இருந்தும் உடல் நலம் இல்லை என்றால் வாழ்வதிலும் பொருள் இல்லை. ஆயுளும் கூடவேண்டும், ஆயுளில் நோய்நொடி இல்லாமல் இளமைத் துடிப்புடன் வாழும் காலமும் அதிகரிக்கவேண்டும்.
இப்படி இருந்தால் ஒரு நாட்டின் சமூகம், அது மூப்படையும் சமூகமாக இருந்தாலும் நாட்டுக்கு அது ஒரு சவாலாக இருக்குமே தவிர பெரும் சுமையாகிவிடாது.
சிங்கப்பூர் சமூகம் வேகமாக மூப்படைந்து வருகிறது. ஆயுளைப் பொறுத்தவரையில் ஜப்பானை விஞ்சி நிற்கும் சிங்கப்பூர், அதிக அளவு மூத்தோரைக் கொண்ட நாடு என்ற ஜப்பானின் நிலையை இன்னும் 10 ஆண்டு களில் எட்டிவிடும் வாய்ப்புள்ளது.
சிங்கப்பூரில் 2008ஆம் ஆண்டில் 65 மற் றும் அதற்கும் அதிக வயதானவர்களாக இருந்தவர்கள் 1,000க்கு 87 பேர். இந்த அளவு பத்து ஆண்டுகளில், அதாவது 2018ல் 137 பேராகிவிட்டது. 2030ல் நால்வரில் ஒருவர் 65 வயதைத் தாண்டியவராக இருப் பார் என்பது கணக்கீடு.
குறைந்த அளவு முதியோரைப் பராமரிக்க அதிக அளவு இளையர்கள் இருந்த காலம் போய், நடுத்தர வயது மக்கள் அதிகரித்த ஒரு நிலை ஏற்பட்டு, குறைந்த அளவு இளை யர்கள் பெரும் அளவு முதியோரைத் தாங்கக் கூடிய நிலை ஏற்படப்போகிறது.
இத்தகைய சூழலில் இளையர்களின் எண்ணிக்கையும் குறைந்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட ஒரு நிலையை எதிர்நோக்கும் நாடு என்ன செய்ய முடியும்?
மக்கள் மூப்படைவதைத் தடுக்க முடியாத பட்சத்தில், அத்தகைய சமூகம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சுமையாக இராமல், அதைப் பொருளியலுக்கும் நன்மை பயக்கும் சமூக மாகத் திகழச் செய்வதுதான் இதில் விவேக மான அணுகுமுறை.
முதியவர்கள் முதுமையிலும் இளமையுடன் திகழவேண்டும். முடிந்தவரை வேலை பார்க்க வேண்டும். தன் நலனுக்குத் தானே பொறுப் பெடுத்துக்கொள்ளவேண்டும். வயதுகூடக் கூட உடற்குறை போன்ற நிலைக்கு அவர்கள் ஆளாவதைத் தடுக்கவேண்டும். முடியாத பட்சத்தில் ஆதரவுக் கரங்கள் வேண்டும்.
மொத்தத்தில் மூத்தோர் சமூகம் மற்றவர் களைச் சார்ந்திராமல் சுதந்திரமாகச் செயல் படும் ஒன்றாகத் திகழவேண்டும். இதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு செய்து முடித்தால் மூப்பு என்பது ஒரு சுமையாகவே இருக்காது.
இதைத்தான் சிங்கப்பூர் செய்துவருகிறது. வேலை வயதை உயர்த்துவது, ஆயுள் முழு வதும் கல்வி, முதியோரைத் தனித்துவிடா மல் சமூகத்தில் ஈடுபடுத்துவது. மெடிஷீல்டு லைஃப் திட்டம், நாடு முழுவதும் உடற்பயிற் சிக் கூடங்கள் போன்ற பலவற்றையும் அம லாக்கி, முதியோரைக் கவனித்துக்கொள்ளக் கூடிய முழுப் பொறுப்பையும் சமூகத்திடமே தள்ளாமல் இந்த முயற்சியில் முதியோரையும் அவர்களின் குடும்பங்களையும் அரசாங்கம் ஈடுபடுத்தி வருகிறது.
இதைப் பொறுத்தவரை, முதியோருக்காக மிகவும் பரந்த அளவில் சமூகப் பராமரிப்பு ஏற்பாடுகள் உள்ள நாடுகளில் ஒன்று என்று கருதப்படும் ஜப்பானிடம் இருந்து சிங்கப்பூர் பலவற்றைக் கற்கமுடியும்.
இயற்கை வளங்கள் எதுவுமின்றி மக்கள் ஒன்றையே வளமாகக் கொண்டுள்ள சிங்கப் பூரில், முடிந்தவரை முதுமையிலும் இளமை யுடன் மக்கள் திகழவேண்டியது கட்டாய மானது என்பதை, அரசு மட்டுமின்றி அனை வரும் உணர வேண்டியது அவசியமானது.