ஹான் யோங் மே, ஆசிரியர், எஸ்பிஎச் சீன மொழிச் செய்திக் குழுமம்
தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு சென்ற ஆகஸ்ட்டில் அமைந்தது முதலே அரசியலில் அக்கறை கொண்ட நண்பர்கள் அடுத்த பொதுத் தேர்தல் எப்போது என்பது பற்றி விவாதித்து வருகிறார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா கிருமித்தொற்று தலைக்காட்டியதை அடுத்து கவனம் கொஞ்சம் மாறியது.
கிருமித்தொற்றை எப்படி சமாளிப்பது, அது எப்படியெல்லாம் பாதிக்கும், நிறுவனங்கள் அந்தச் சவாலைச் சமாளித்து எப்படி மீண்டு வரும் என்பதில் மக்கள் இப்போது அதிக அக்கறைக் காட்டுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நேரத்தில் பொதுத் தேர்தல் நடக்காது என்று பெரும்பாலான மக்கள் நினைத்திருந்தபோது, திடீரென தேர்தல் தொகுதி எல்லைகள் குறித்த மறுஆய்வுக் குழு அறிக்கை வெளியாகி இருக்கிறது. கொரோனா கிருமித்தொற்று பற்றி பரபரப்பாக செய்தி வெளியிட்டு வந்த செய்தியாளர்களுக்குக்கூட இது வியப்பாகியது.
விரைவில் பொதுத் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பு பற்றி செய்தியாளர்கள் தீவிரமாக யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது.
திரு லீ சியன் லூங் 2004ல் பிரதமராக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு நடந்த மூன்று பொதுத் தேர்தல்களையும் திரு கோ சோக் டோங் பிரதமராக இருந்தபோது நடத்தப்பட்ட பொதுத் தேர்தலையும் பார்க்கையில் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கை வெளி யானதற்குப் பிறகு கொஞ்ச காலத்திலேயே பொதுத் தேர்தல் நடந்தப்பட்டு வந்திருப்பது தெரிகிறது.
இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கையில், இன்னும் சில வாரங்களில் பொதுத் தேர்தல் நடக்கக்கூடிய வாய்ப்பு தெரிகிறது.
இந்நிலையில், கோவிட்-19ன் ஆகப் புதிய நிலவரங்களைப் பார்த்தால் அதைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்றே தெரிகிறது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கொரோனா கிருமித்தொற்றின் தாக்கம் தொடக்க கட்டங்களிலேயே இருக்கின்றன. சிங்கப்பூர் தனது குடிநுழைவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக மும்முரப்படுத்தி உள்ளது.
இந்த நடவடிக்கைகள் எல்லாம் பலன் தருமானால் இன்னும் இரண்டு வார காலத்தில் வெளியில் இருந்து சிங்கப்பூருக்குள் கொரோனா நுழைவது குறைந்துவிடும். சிங்கப்பூரில் சமூகப் பரவலாக கொரோனா உருவெடுக்கவில்லை என்றால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் ஆங்காங்கே கிருமித்தொற்றுகளும் மங்கிவிடும்.
அரசாங்கம் கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த இப்போது எடுத்துவரும் பல முயற்சிகளின் காரணமாக அந்தக் கிருமிகள் முற்றாக அழிந்துவிடாது என்றாலும் இன்னும் ஒரு மாத காலத்தில் கொரோனா கிருமித்தொற்று ஒடுங்கிவிடும் என்பதற்கு அதிக வாய்ப்புகள் தெரிகின்றன.
ஓராண்டு காலத்திற்குள் இந்த உலகக் கிருமித்தொற்றுக்கு முடிவுகட்டுவது இயலாதது என்னும் பட்சத்தில், அரசமைப்புச் சட்டப்படி அதற்கான காலக்கெடுவான 2021 ஏப்ரல் வரை ஒத்திவைக்காமல், கிருமிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் காலகட்டத்திலேயே பொதுத் தேர்தலை நடத்துவதே சிறந்ததாக இருக்கும்.
கிருமித்தொற்றுக்கு இடையே பொதுத்தேர்தலை நடத்துவதன் மூலம் ஆளும் மக்கள் செயல் கட்சி அரசாங்கம் தனக்குத் தானே சிரமமான அரசியல் பிரச்சினையை உண்டுபண்ணுகிறதா? அல்லது வாக்காளர்களிடம் இருந்து வலுவான ஆதரவைப் பெறுவதற்கு அந்தக் கட்சிக்குக் கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாக இது இருக்குமா?
சிங்கப்பூர் கொரோனா கிருமித்தொற்றைக் கடந்த மூன்று மாத காலமாகக் கையாண்டு வரும் விதத்தைப் பார்க்கையில், சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கப்பூர் தன்னுடைய கொரோனா கிருமி எதிர்ப்பு நடவடிக்கைகளைச் செம்மையாக மாற்றி அமைத்து கொண்டு வருவதைக் காணலாம்.
இந்தக் கிருமித்தொற்றை சிங்கப்பூர் கையாளும் விதம் முரண் இல்லாமல் இருந்து வருகிறது. கிருமியைக் கட்டுப்படுத்த முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் அதேவேளையில், மக்களின் வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளைக் கூடுமான வரையில் குறைக்கவும் நாம் முயன்று வருகிறோம்.
உடனடி கிருமித்தொற்று சம்பவங்களைச் சமாளிக்கும் அதேவேளையில், தன்னுடைய நீண்டகால உத்தி இலக்குகளில் இருந்து விலகிச் செல்லாமலும் திறந்த நிலையில் தொடர்ந்து இருந்து, அனைத்துலக நற்பெயரைக் காப்பாற்றிக்கொண்டு வரும் நாடாகவும் சிங்கப்பூர் உள்ளது.
இதற்கு கோஸ்டா ஃபார்ட்சுனா உல்லாசக் கப்பலைச் சிங்கப்பூர் தன் கடற்கரையில் அனுமதித்ததை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
இதுவரையில் கொரோனா கிருமித்தொற்றைக் கையாளுவதற்கான சிங்கப்பூரின் உத்தி அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்று இருக்கிறது.
உள்நாட்டிலும் குறைகூறல்களைவிட அதிக பாராட்டு அரசாங்கத்திற்குக் கிடைத்து இருக்கிறது. இந்தக் காலகட்டம், ஆளும் கட்சிக்குச் சிக்கலான ஒரு காலகட்டமாக இருக்கலாம். ஆனால் தலைசிறந்த வாய்ப்பை வழங்குவதாவும் இது இருக்கிறது.
கொரோனா கிருமித்தொற்று நம் சமூகத்தில் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், ஆளுமை ஆகிய அடிப்படை கோட்பாடுகளில் கவனம் செலுத்தவும் நம்மை நெருக்கி இருக்கிறது.
பொதுத் தேர்தல் என்பது மக்கள் தங்கள் வாழ்க்கையையும் தாங்கள் விரும்பும் எதிர்காலத்தையும் தாங்கள் எப்படி நிர்வகித்து நடத்தப்பட வேண்டும் என்பதையும் பற்றித் தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய ஒரு தருணம்.
அமைதிக் காலத்தின்போது ஒரு விருப்ப உரிமையையும் நெருக்கடியின்போது கூடுதலாக ஒரு விருப்ப உரிமையையும் அளிக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்த அரசாங்கம் எதுவும் இல்லை. ஒரே நேரத்தில் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்ற முடியவில்லை என்றால் நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள்?
நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல் நான்காம் தலைமுறைத் தலைவர்களை நம்பி வாக்களிக்கும் ஒரு தேர்தலாகும். கடந்த மூன்று மாத காலமும் இந்தத் தலைவர்களுக்கு ஒரு பொதுத் தேர்வு காலமாக இருந்து வந்துள்ளது.
வெளியே தெரியாத ஒரு மாணவி போன்ற நாடு சிங்கப்பூர். அந்த மாணவி படிக்கிறாரா இல்லையா என்பதுகூட சுற்றி இருக்கும் மக்களுக்குத் தெரியாது. சிலர் அந்த மாணவியை நினைத்து கவலைப்படுவார்கள். மற்றவர்கள் குறைகூறுவார்கள். முடிவில் அந்த மாணவி தலைசிறந்த சாதனைகளுடன் தேர்வில் தேர்ச்சி பெறுவார் என்று சிலர் வர்ணித்துக் கூறுகிறார்கள்.
நான்காம் தலைமுறைத் தலைவர்களின் கீழ் நடந்து வரும் கொரோனா கிருமித்தொற்று எதிர்ப்புப் போரில் சில குறைபாடுகள் இருக்கலாம் என்றாலும் மொத்தத்தில் அவர்கள் சாதித்து இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையைப் படிப்படியாகப் பெற்று வருகிறார்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுத் தேர்தலை நடத்திவிட வேண்டும். இப்போதைய காலகட்டத்தில் பொதுத் தேர்தலை நடத்துவது ஆபத்தானது என்று தெரிந்தாலும் பொதுத் தேர்தலுக்கான தலைசிறந்த வாய்ப்பாகவும் அது திகழக்கூடும்.
அமைதிக் காலத்தில் கிளம்பக்கூடிய எந்தப் பிரச்சினைக்கும் ஆளும் கட்சி மீது மக்கள் குறைகூறக்கூடும். ஆனால் சவாலான காலகட்டத்தில் எல்லாருக்குமே ஒரே குறிக்கோள்தான் இருக்கும்.
இந்தக் காலகட்டத்தில் பொறுப்பில் இருப்பவருக்கு ஒரே எதிரி அவரும் சவால்களும்தான்.
* லியான்ஹ சாவ் பாவ் நாளிதழில் முதன் முதலாக வெளியான இந்தக் கட்டுரை சீன மொழியில் எழுத்தப்பட்டு பின்னர் ஆங்கிலம் வழி தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.