கொரோனா கிருமித்தொற்றைத் தடுத்து அதைத் துடைத்தொழிக்க உலகமே பாராட்டும் வகையில் சிங்கப்பூர் படு தீவிரமாக தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இருந்தாலும் அந்த முயற்சிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வகையில் கொரோனா கிருமிகள் முன்பைவிட இன்னும் தீவிரம் காட்டத் தொடங்கி இருக்கின்றன.
சிங்கப்பூரில் அந்தக் கிருமி 1,100 பேருக்கும் அதிக மக்களைப் பாதித்துவிட்டது. ஆறு பேரைக் கொன்றுவிட்டது.
இந்நிலையில், சமூகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா கிருமி வியாபித்து பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக அரசாங்கம் வெள்ளிக்கிழமை மேலும் கடுமையான பல நடவடிக்கைகளை அறிவித்தது.
மருந்தகங்கள், பொதுப் போக்குவரத்து, வங்கிகள் போன்ற முக்கியமான, அத்தியாவசியத் துறைகள் தவிர, பெரும்பாலான வேலையிடங்கள் செவ்வாய்க்கிழமை முதல் ஒரு மாத காலத்திற்கு மூடப்படுகின்றன.
அதேபோல, எல்லா பள்ளிக்கூடங்களும் உயர்கல்வி நிலையங்களும் வரும் புதன்கிழமை முதல் மூடப்படுவதால் அவை வீடுகளுக்கே இடம் மாறுகின்றன. சிங்கப்பூரர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்குக் கூடுமான வரையில் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது.
குடும்ப உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களுடன் கலந்துறவாடுவதை அவர்கள் தவிர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.
உணவு உள்ளிட்ட முக்கியமான பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே அவர்கள் வெளியே செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே அந்தப் புதிய நடவடிக்கை களின் நோக்கம்.
கொரோனா கிருமிகள் தலைதூக்கிய உடனேயே சிங்கப்பூர் விழித்துக்கொண்டு சரசரவென பல நடவடிக்கைகளை அமல்படுத்தி வந்துள்ளது. குறிப்பிட்ட வருகையாளர்களுக்கு எல்லைகளை மூடியது. பொதுமக்கள் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது.
மதுபானக் கூடங்களையும் பொழுதுபோக்கு நிலையங்களையும் இழுத்து மூடியது. துணைப்பாட வகுப்பு நிலையங்களையும் தற்காலிகமாக அது நிறுத்திவைத்தது. ஒரு மீட்டர் இடைவெளி நியதியைப் பின்பற்றாத வேலை இடங்கள் செயல்படக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீட்டில் தங்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதை மீறிய சிங்கப்பூரரின் பாஸ்போர்ட்கூட ரத்து செய்யப்பட்டது.
இந்த அளவுக்குத் தீவிர நடவடிக்கைகளை உடனுக்குடன் அதிரடியாக சிங்கப்பூர் எடுத்து வந்த போதிலும் கொரோனா கிருமிகள் அவற்றையும் மீறி கைவரிசையைக் காட்டுகின்றன.
இந்த நிலையில்தான், மே 4 வரை ஒரு மாத கால கட்டுப்பாடு நடப்புக்கு வருகிறது. அத்தியாவசிய காரியங்கள் தொடரும் அதேவேளையில், கூடுமான வரையில் சிங்கப்பூரர்களை வீட்டிலேயே இருக்கச் செய்வது அதன் நோக்கம். பல காரியங்களை அரசாங்கம் எடுத்து வந்தாலும் கொரோனவை ஒழிப்பதில் சிங்கப்பூர் மக்களின் பங்கு முன்பைவிட இப்போது மிக முக்கியமானது என்று இந்தக் காலகட்டம் வலியுறுத்திக் கூறுகிறது.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுவது, கிருமிநாசினி திரவத்தைப் பயன்படுத்துவது, முகக்கவசம் அணிவது, ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிப்பது, உடல்நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே இருப்பது என்று பொறுப்புடன் இதுநாள் வரை நடந்து வந்துள்ள சிங்கப்பூரர்கள், இந்த நடைமுறைகளை, பழக்கங்களை இன்னும் மும்முரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையே நிலவரங்கள் உணர்த்துகின்றன.
சிங்கப்பூரில் தொடக்கத்தில் வெளியில் இருந்துதான் கொரோனா கிருமி நுழைந்தது. ஆனால் எப்படி பரவியது என்பது தெரியாமலேயே இப்போது அந்தக் கிருமிகள் சிலரைப் பீடித்து இருக்கின்றன.
இவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அன்றாடம் புதிதாக பாதிக்கப்படுவோரில் பாதி பேர் இப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
சமூகத்தில் மேலும் பலருக்கு கொரோனா கிருமித்தொற்று இருக்கலாம். அவர்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கலாம் என்ற அச்சமும் தலைதூக்கி வருகிறது.
கொரோனா காலக்கட்டம் ஒவ்வொருவருக்குமே பொல்லாத நேரமாக இருக்கிறது என்பதை எல்லாரும் உணரவேண்டும்.
நிறுவனங்கள் மூடி இருக்கின்றன, ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், சுயதொழில் புரிவோர் வருமானம் குறைந்து கவலைப்படுகிறார்கள், பள்ளிக்கூடங்கள் வீடுகளுக்கு இடம் மாறி பெற்றோருக்குப் பொறுப்புகள் கூடி உள்ளன.
இவை எல்லாமே சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்ற அவசர அவசியத்தை மக்களுக்கு உணர்த்துகின்றன.
இதன் காரணமாகத்தான் அரசாங்கம் இன்னும் ஒரு படி மேலே சென்று ஒரு மாத கால கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. கொரோனா கிருமி ஒழிப்புப் போரில் ஒவ்வொருவரும் பொறுப்புடன் முழுமூச்சாக ஈடுபட வேண்டும் என்பதை நிலவரங்கள் கட்டாயமாக்குகின்றன. கிருமிகள் சமூகத்தில் பரவாமல் தடுக்க வேண்டுமானால் இந்தப் போரில் சிங்கப்பூரர்கள் முக்கியமாக ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்.
அவர்கள் கூடுமான வரை வீட்டிலேயே தங்கி இருக்கவேண்டும். வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளத்தான் வேண்டும். சட்டம் ஒருபுறம் இருந்தாலும் பலவற்றையும் நினைத்துப் பார்த்து, இப்படி சுய உறுதி பூண்டு சிங்கப்பூரர்கள் அந்த உறுதியைத் திறம்பட நிறைவேற்ற வேண்டும்.
இப்படிச் செய்தால் அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் சமூகமும் நாடும் கொரோனா கிருமியின் கொடூர வலையில் இருந்து தப்பி பாதுகாப்பான கேடயத்தை அமைத்துக் கொள்ள வழி ஏற்படும் என்பது திண்ணம்.
இதைச் செய்யவில்லை என்றால் கொவிட்-19 கிருமிகள் மேலும் என்னென்ன ஆபத்துகளை, பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது.