சிங்கப்பூர் கொரோனா கிருமியை ஒடுக்கி அந்தப் போராட்டத்தில் வெற்றி பெறுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கியதாகக் கருதப்பட்ட நிலையில், திடீரென வெளிநாட்டு ஊழியர்களிடையே கிருமித்தொற்று பூதாகரமாகக் கிளம்பிவிட்டது.
நாளொன்றுக்கு கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை இரட்டை இலக்க அளவில் இருந்து வந்த நிலையில், திடீரென நூற்றுக்கணக்கில் அந்த எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு ஊழியர்களாக இருக்கிறார்கள்.
இது சிங்கப்பூருக்கு மட்டுமின்றி வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பல்வேறு நாடுகளில் உள்ள அவர்களின் குடும்பத்தாருக்கும் பயத்தைக் கிளப்பியது.
சிங்கப்பூரில் பல நூறாயிரம் வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். கட்டுமானம் உள்ளிட்ட பல அத்தியாவசிய துறைகளிலும் பணியாற்றும் அத்தகைய ஊழியர்களுக்கு என்றே எல்லா வசதிகளோடும் விடுதிகள் பல இடங்களிலும் இருக்கின்றன.
அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளுக்கும் கிருமித்தொற்றுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து இதில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்தது.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆற்றலுடன் நடப்புக்குக் கொண்டு வரும் பணியில் போலிசும் ஆயுதப்படையும் உதவிக்கரம் நீட்டின.
இத்தகைய விடுதிகளில் சங்கிலித்தொடர் போல் கிருமி தொற்றுவதைத் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் நல்ல உடல்நலத்துடன் உள்ள, குறிப்பாக அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ராணுவ முகாம்கள், மிதவை ஹோட்டல்கள், காலியான வீவக புளோக்கு களுக்கு இடம் மாற்றப்பட்டு வருகிறார்கள்.
பல்வேறு விடுதிகளிலும் ஊழியர்களுக்குச் சகலவிதமான சோதனைகளும் நடத்தப்படுகின்றன. ஊழியர்கள் தங்கள் அறைகளிலேயே 14 நாட்கள் தங்கியிருக்கும் வகையில் பல விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு, விடுதிகளின் துப்புரவு, தூய்மை எல்லாவற்றையும் உறுதிப்படுத்தும் வகையில் பல குழுக்களும் பணிகளில் இறங்கி இருக்கின்றன. மருத்துவர்களும் உதவி வருகிறார்கள். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாக அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது; அப்புறப்படுத்தப்படுகிறார்கள்.
வெளிநாட்டு ஊழியர்களை கொரோனா தொற்றிலிருந்து காக்க சிங்கப்பூர் அரசாங்கம் பிரம்மாண்ட முயற்சியைப் பரந்த அளவில் எடுக்கிறது. இந்த முயற்சி அவசியமானதே என்பதைச் சொல்லவேண்டியதில்லை.
விடுதிகளை நடத்துவோரும் முதலாளிகளும் ஊழியர்களும் எவ்வளவோ முயற்சிகளை எடுத்து இருந்தாலும் அவற்றை எல்லாம் முறியடிக்கும் வேகத்தில் கொரோனா கிருமி பரவுகிறது.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கொரோனா கிருமி தலைகாட்டத் தொடங்கியபோது வீட்டிலேயே இருக்க வேண்டும் என்ற உத்தரவு, நுழைவுக் கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகள் நடப்புக்கு வந்தன. ஆனால் அவை எல்லாம் விரும்பிய பலனை அளிக்கப் போதுமானவை அல்ல என்பது தெரியவந்ததும் அரசாங்கம் தலையிட்டு ஊழியர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியது.
இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஊழியர்களின் நலனையும் ஒட்டுமொத்தத்தில் சமூகத்தின் நலனையும் பாதுகாக்க அவசியமானவையாக இருக்கின்றன.
கொரோனா கிருமித்தொற்று என்பது வெளிநாட்டு ஊழியர்களால் ஏற்படக்கூடிய நோய் அல்ல. எல்லாரையும் போல அவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். கொரோனா கிருமி தலைவிரித்தாடுவதற்கு எந்தவொரு இனமோ, சமயமோ காரணம் என்று கூற முடியாது.
நாடு, இனம், சமயம் எதையும் பாராமல் அந்தக் கிருமி பரவுகிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் மக்கள் மிரட்டப்படுகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசாங்கங்கள் எல்லாமே தங்கள் மக்களையும் தங்கள் நாடுகளில் தங்கியிருப்போரையும் பாதுகாக்க பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
அதேபோல் சிங்கப்பூரும் தன் மக்களைக் காக்கும் அளவுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் நலனிலும் ஒருமித்த கவனம் செலுத்துகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 10ஆம் தேதி பிரதமர் லீ சியன் லூங், காணொளி மூலம் ஒரு செய்தி விடுத்தார்.
கொரோனா கிருமித்தொற்று போராட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் அனைத்து தேவைகளுக்கும் தலைசிறந்த முறையில் சிங்கப்பூர் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்று உறுதி அளித்தார்.
அவர்களின் நல்வாழ்வில் சிறப்பு கவனம் செலுத்தப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கடுமையாகப் பாடுபட்டு பொருளீட்ட அவர்கள் இங்கு வருகிறார்கள். சிங்கப்பூரில் வீவக புளோக்குகள், சாங்கி விமான நிலையம், எம்ஆர்டி வழித்தடம் போன்றவற்றை அமைப்பதில் வெளிநாட்டு ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களை நம்பி அவர்களின் குடும்பங்கள் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டிய பிரதமர், வெளிநாட்டில் வசிக்கும் ஊழியர்களின் குடும்பங்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஊழியர்கள் நலனுக்குச் சிங்கப்பூரின் உத்தரவாதத்தையும் அவர் அளித்தார்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களைக் காப்பதற்காக பயன்படுத்தக்கூடிய வளங்கள் எல்லாம் கொரோனா கிருமியைத் துடைத்தொழிக்க சிங்கப்பூர் நடப்புக்குக் கொண்டு வரும் ஒட்டுமொத்த பாதுகாப்பின் ஓர் அங்கம் என்றுதான் கூறவேண்டும்.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் ஒவ்வொன்றுக்கும் உதவுகிறார்கள். அவர்கள் நலனில் காட்டப்படும் அக்கறை, வெளிநாடுகளில் உள்ள அவர்களின் குடும்பத்திற்கும் நம்பிக்கை ஏற்படுத்தும். வெளிநாட்டு ஊழியர்களிடம் ஒரு மனஉறுதியும் ஏற்படும்.
இங்கேயே தொடர்ந்து இருந்து பொருளியல் சூடுபிடிக்கும்போது இதே நாட்டிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் திண்ணமாகும். அவர்கள் நலன் நம் நலன், சிங்கப்பூரின் நலன்.