சீனாவில் பிறந்து, சிங்கப்பூரையும் பாதித்து, உலகையே பயமுறுத்தி லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்ட கொரோனா கிருமி ஒடுங்குகிறது என்பதற்கான அறிகுறிகள் ஓரளவிற்குத் தலைகாட்டி இருப்பதால் உலகம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கி இருக்கிறது.
ஐரோப்பாவில் பிரான்ஸ், இத்தாலி முதல் டென்மார்க், ஜெர்மனி வரை பல நாடுகளும் அமெரிக்காவும் கட்டுப்பாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தத் தொடங்கி இருக்கின்றன.
சில நாடுகளில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. ஒப்பனை நிலையங்களும் சிகை அலங்கார நிலையங்களும் செயல்படத் தொடங்கி இருக்கின்றன.
கொரோனா கடுமையாகப் பாதித்த இத்தாலியில்கூட பூங்காக்கள், தொழிற்சாலைகள், கட்டுமான இடங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் பள்ளிக்கூடங்கள் இன்னும் சில மாதங்களுக்கு அங்கு மூடியேதான் இருக்கும் போல் தெரிகிறது.
இப்படி கட்டுப்பாடுகளை சில நாடுகள் தளர்த்தத் தொடங்கி உள்ள போதிலும் ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளுமே இன்னமும் அச்சத்தோடுதான் இருக்கின்றன.
சரசரவென வழக்கநிலைக்குத் திரும்பினால் பேராபத்து மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடுமோ என்று உலகம் அஞ்சுகிறது. அவசரப்பட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம். கொரோனா கிருமி மறுபடியும் தலைதூக்கும் என்ற நிலவரத்தை மனதில் கொண்டு அதற்கு எல்லா நாடுகளும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
பல நாடுகளையும் ஒத்த சூழ்நிலைதான் சிங்கப்பூரிலும் தெரிகிறது. கிருமித்தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
சமூகத் தொற்றுக்கு ஆளாகிவிட்டவர்களின் எண்ணிக்கை சென்ற சனிக்கிழமை வெறும் ஒன்பதாக இருந்தது. ஆனால் அடுத்த நாளே அந்த எண்ணிக்கை 15 ஆகிவிட்டது.
கொரோனா கிருமியால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10க்குக் குறைவாகவே தொடர்ந்து இருந்து வரவேண்டும். அப்போதுதான் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அப்படி கட்டுப்பாடுகளைத் தளர்த்தினாலும்கூட மிகவும் எச்சரிக்கையுடன்தான் செயல் படவேண்டி இருக்கும் என்பதால் இங்கு கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு மே 19 முதல், நேரடிப் போதனைகள் தேவைப்படும் மாணவர்கள் சிறுசிறு குழுக்களாகப் பள்ளிக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், முடி திருத்தகம், சலவை, ரொட்டி தயாரிப்பு போன்ற சேவைகள் மீண்டும் தொடங்க மே 12ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்றும் அடுத்த வாரம் சில கட்டுப்பாடுகள் சரிசெய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்களிடம் அதிக பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டும். மக்கள் நடமாட்டத்தைப் புதிய தொழில்நுட்பம் மூலம் கண்காணிக்க வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தப்படுகிறது.
இங்கு ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள், அவர்களின் விடுதிகளில் இருந்து பல இடங்களுக்கும் இடம் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதனால் தனி மனித சமூக இடைவெளி நியதி உறுதியாகக் கடைப்பிடிக்கப்படும் சூழல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
ஆனாலும் அத்தகைய ஊழியர்களிடம் கிருமித்தொற்று குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைய இன்னமும் அதிக காலம் பிடிக்கும் என்றுதான் தெரிகிறது.
சிங்கப்பூரின் ஊழியர் அணியில் சுமார் 15 விழுக்காட்டினர், அதாவது சுமார் 350,000 பேர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் நாள்தோறும் வேலைக்குச் சென்று வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் சமூகத் தொற்று என்பது எப்போதும் சாத்தியமானதே என்பது வெளிப்படை.
இங்கு கடைத்தொகுதிகள் முதல் விடுதிகள் வரை பல இடங்களிலும் கொத்துக் கொத்தாகப் பலரையும் கிருமி தொற்றி இருப்பதும் தெரியவந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தாதிமை இல்லங்கள், நல்வாழ்வு நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்கள் அங்கு தங்கி இருப்பவர்களுக்கும் கிருமி தொற்றி அதனால் மூத்த குடிமக்களும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு இருப்போரும் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் கவலையும் தொடர்ந்து இருந்து வருகிறது.
அதிக மக்கள் குடியிருக்கும் வாடகை வீடுகள், வீவக சிறிய வீடுகளில் குடியிருக்கும் பெரிய குடும்பங்கள் ஆகியவையும் கிருமி பரவலுக்கு உள்ளாகும் ஆபத்தும் உள்ளது.
கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடப்புக்குக் கொண்டு வந்துள்ள நடவடிக்கைகள் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்.
வழக்கநிலை திரும்ப வேண்டும் என்று மக்கள் விரும்புவது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான் என்றாலும் அத்தகைய வழக்கநிலை திரும்புவதற்கு இன்னும் காலம் பிடிக்கும் என்பதையே சூழ்நிலை உணர்த்துகிறது.
கொரோனா பிறந்த சீனாவின் வூஹான் நகரில்கூட நிலவரம் எவ்வளவோ மேம்பட்டு இருந்தாலும் எல்லாம் அங்கு இன்னும் வழக்க நிலைக்குத் திரும்பியதாகத் தெரியவில்லை.
இருமும் போதும் தும்மும் போதும் வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும் என்பது போன்ற நல்ல, சுகாதார பழக்கவழக்கங்களை மக்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த புதிய விதிமுறைகள் அங்கு நடப்புக்கு வருகின்றன.
சளிக் காய்ச்சல் வழக்கமாக தலைதூக்கக்கூடிய காலகட்டம் வருவதால் அதனுடன் கொரோனா கிருமியும் சேர்ந்துகொண்டு அடுத்த கட்ட ஆட்டத்தைத் தொடங்கக்கூடும் என்று தென் கொரியா போன்ற நாடுகள் பயப்படுகின்றன.
கொரோனா கிருமித்தொற்று இதுவரை உலகம் பார்த்திராத புது மிரட்டலாக இருப்பதால் அந்தக் கிருமிகளை முற்றாகத் துடைத்தொழித்துவிட்டு பழையபடி உலகம் செயல்படும் என்பதற்கான வாய்ப்புகள் வெகு விரைவில் கைகூடும் என்பது சந்தேகமே.
சிங்கப்பூரும் இதற்கு விதி விலக்கல்ல. எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கையில் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமிக்கு எதிராக நெடும் போராட்டத்தை சிங்கப்பூர் தொடர வேண்டி இருக்கும் என்பதுதான் உண்மை நிலவரமாகத் தெரிகிறது.
அப்படிப்பட்ட போராட்டம் காரணமாக கொரோனா மறையும்; அது கட்டாயமாக்கி விட்டுச்செல்லும் சுத்தமான, சுகாதார பழக்க வழக்கங்கள் மக்களின் அன்றாட நடைமுறை யாக மாறி நிரந்தரமாக நீடித்து நிலைக்கும் என்று நம்புவோம்.