இவ்வாண்டு பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பில் பயிலும் சிறார்களின் பெற்றோருடைய மனதில் ஒரு சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்.
தம் பிள்ளைக்கு நல்லதொரு தொடக்கப்பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதே அது. அத்தகைய பெற்றோரில் நானும் ஒருவன்.
தொடக்கநிலை ஒன்றாம் வகுப்புக்கான பதிவு நடவடிக்கை அடுத்த மாத இறுதியில் தொடங்கும்.
குலுக்கல் முறையில் இடம் அளிக்கப் படும்போது பள்ளியின் தேர்வு பெற்றோர் கையில் இருப்பதில்லை,
மிகச்சிறந்த தொடக்கப்பள்ளியாகவோ அக்கம்பக்க பள்ளியாகவோ இருக்கட்டும், அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் பலதரப்பட்ட சமுதாயப் பின்னணிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருப்பார்கள்.
அத்தகைய ஒரு சூழலில், மாணவரின் சமுதாயப் பின்னணிக்கும் அவர் பயிலும் பள்ளியின் தகுதிநிலைக்கும் பெரும்பாலும் தொடர்பு இருக்காது.
எனினும், தற்போதைய நிலை அப்படியல்ல.
தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவு நடவடிக்கையில் பல்வேறு கட்டங்கள் உள்ளன. முதலாம் கட்டம், தற்போது தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் உடன்பிறப்புகளுக்கானது.
தம் பெற்றோர் அல்லது உடன்பிறப்புகள் தொடக்கப்பள்ளியின் முன்னாள் மாணவர்களாக இருந்தால், சிறார்கள் அதே பள்ளியில் சேர கட்டம் 2ஏ முன்னுரிமை அளிக்கிறது.
அதோடு, தொடக்கப்பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களாகவோ தொடக்கப்பள்ளி ஊழியர்களாகவோ அதன் ஆலோசனை, நிர்வாகக் குழு உறுப்பினர்களாகவோ இருக்கும் பெற்றோரின் பிள்ளைகளும் கட்டம் ‘2ஏ’வில் பதிவு செய்யலாம்.
தொடக்கப்பள்ளியுடன் தொடர்புடைய கல்வி அமைச்சு பாலர் பள்ளியில் பயில்வோரும் இதே கட்டத்தில் பதிந்துகொள்ளலாம்.
கட்டம் 2பி, தொடக்கப்பள்ளியில் தொண்டூழியம் புரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கானது. சமூகத் தலைவர்கள் அல்லது பள்ளியுடன் தொடர்புடைய அமைப்புகளின் உறுப்பினர்களாக உள்ளோரின் பிள்ளைகளும் இதே கட்டத்தில் பதிவு செய்யலாம்.
ஆரம்ப கட்டங்களில் பதிவுசெய்ய தகுதிபெறாதவர்கள் 2சி கட்டத்தில் பதிந்துகொள்ளலாம். ‘2சி’யிலும் பதிந்துகொள்ளாதோர் 2சிஎஸ் கட்டத்தில் அவ்வாறு பதியலாம். மூன்றாம் கட்டம், சிங்கப்பூரர், நிரந்தரவாசி அல்லாதோருக்கானது.
ஒரு கட்டத்தில், குறிப்பாக 2பி மற்றும் 2சி கட்டங்களில் தொடக்கப்பள்ளிக்கு அதிகமான விண்ணப்பங்கள் வந்துசேரும்போது, அப்பள்ளிக்கும் மாணவர் வசிக்கும் வீட்டிற்கும் இடையேயான தூர அடிப்படையிலான விதிகள் பொருந்தும். அதாவது, பள்ளியில் இருந்து 1 கிலோமீட்டர் தூரத்திற்குள் வசிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
தொடக்கநிலை ஒன்றுக்கான பதிவு நடவடிக்கை குறித்த விவாதத்தை எதிர்கொள்வது சற்று கடினமே. எடுத்துக்காட்டாக, பள்ளியுடனான உறவுகளைப் பாதுகாத்து, அவற்றை மேம்படுத்த தற்போதைய நடைமுறை உதவுவதாக முன்னாள் மாணவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், சமுதாயத்தில் உன்னத நிலையில் இருப்பவர்களுக்கே உரியவையாக இந்தப் பள்ளிகள் விளங்குவதாக வேறு சிலர் கருதுகின்றனர்.
பள்ளிக்கும் வீட்டிற்கும் இடையே உள்ள தூர அடிப்படையில் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பது பற்றி சிங்கப்பூரர்களிடையே அதிகம் பேசப்பட்டு வருகிறது.
தூர அடிப்படையிலான தகுதிக்கூறு பற்றி குறை எதுவுமில்லை. சொல்லப் போனால், வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளியில் தம் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் விரும்புவது நியாயமானதே.
எனினும், இங்கே இரு உண்மை நிலவரங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.
முதலாவது, ஒவ்வொரு பள்ளியும் நல்ல பள்ளிதான் என்று கூறப்பட்டு வந்தாலும் உண்மை நிலவரம் அதைப் பிரதிபலிப்பதில்லை. ஒவ்வோர் ஆண்டும் அதே சில பள்ளிகளுக்கே அதிகமான விண்ணப்பங்கள் வந்துசேர்கின்றன. பள்ளியின் தரத்தில் நிலவும் வித்தியாசத்தைப் பெற்றோர் கவனிப்பதை இது காட்டுகிறது.
இரண்டாவது, அதே பள்ளிகள் தீவு முழுவதும் பரந்து விரிந்திருப்பதில்லை.
தனியார் சொத்து மேம்பாட்டாளர்கள் தங்கள் வீடமைப்புத் திட்டங்களை விளம்பரப்படுத்தும்போது, அவற்றுக்கு அருகிலுள்ள எம்ஆர்டி நிலையங்கள், கடைத்தொகுதிகள் போன்ற வசதிகளுடன் பிரபலமான பள்ளிகளையும் சேர்த்துக்கொள்கின்றனர்.
பிரபலமான தொடக்கப்பள்ளிகளுக்கு அருகே உள்ள வீடுகளின் விலைகளும் வாடகையும் அதிகரிக்கக்கூடும் என்று சொத்துச் சந்தை நிபுணர்கள் முன்னதாகக் கூறிஇருந்தனர்.
அத்தகைய பள்ளிகளுக்கு அருகே வீடு வாங்கும் வாய்ப்புள்ளவர்கள், தூர அடிப்படையிலான சேர்க்கை மூலம் பலனடையலாம். பிரபலமான தொடக்கப்பள்ளியில் தம் பிள்ளையைச் சேர்ப்பதற்காகவே வீடு மாறும் பெற்றோரைப் பற்றியும் நாம் கேள்விபட்டிருக்கிறோம்.
மாணவர்கள் எங்கு வசித்தாலும் சரி, நல்ல தொடக்கப்பள்ளிகள் அவர்களுக்கு எட்டும் தூரத்தில் இருந்தால் சிறப்பு. அந்த நிலை ஒருநாள் எட்டப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.
ஒவ்வொரு தொடக்கப்பள்ளியின் தரத்தையும் உறுதிசெய்ய கல்வி அமைச்சு தொடர்ந்து கடப்பாடு கொண்டிருப்பதாக அப்போதைய கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் 2021ல் கூறியிருந்தார்.
“நம் பிள்ளைகள் கல்விக்காக எங்கு சென்றாலும் சரி, தங்களது முழு ஆற்றலை அடைய அவர்களுக்கு நல்ல ஆதரவு வழங்கப்படும்,” என்று அவர் சொல்லியிருந்தார்.
அந்த வகையில், என் வீட்டிற்கு அருகிலுள்ள தொடக்கப்பள்ளியில் என் மகன் சேர்ந்து, ஆறாண்டு கல்வியை முடித்து, தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்று, சமுதாயத்திற்குப் பயனுள்ளவராக, சிறந்த பண்புநலன்களைப் பெற்றவராக, உதவி தேவைப்படுவோருக்கு கைகொடுப்பவராகத் திகழ்ந்தால் அதைவிட பெருமை எனக்கு வேறு எதுவும் கிடையாது.
கல்விப் பயணத்திலும் பின்னர் வாழ்விலும் ஏற்றத்தாழ்வைக் களைய தொடக்கப்பள்ளி நல்லதொரு தொடக்கமாக அமையட்டும்.