காற்பந்து மோகம் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்பது நம்பிக்கை. எனினும், நமது ஆண்கள் தேசிய காற்பந்து அணியின் வரலாறு, தற்போதைய நிலை இரண்டும் அதைப் பிரதிபலிக்கவில்லை என்பது கசப்பான உண்மை.
இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 22 வயதுக்கு உட்பட்டோருக்கான சிங்கப்பூர் அணி படுமோசமாகத் தோற்றது மட்டுமின்றி, மலேசியாவிடம் 7-0 எனும் கோல் கணக்கில் மரண அடி வாங்கியது. போட்டியில் மலேசியா, சிங்கப்பூர் இரண்டும் முதல் சுற்றைத் தாண்டவில்லை.
ஆசியக் காற்பந்துக் கூட்டமைப்பு (ஏஎஃப்சி) ஆசிய கிண்ணப் போட்டிக்கு சிங்கப்பூர் ஒருமுறை மட்டுமே தகுதிபெற்றிருக்கிறது. 1984ஆம் ஆண்டு அந்நிகழ்வு இடம்பெற்றது.
ஆசிய விளையாட்டுகளின் காற்பந்துப் போட்டியில் சிங்கப்பூர் 1966ஆம் ஆண்டில் மட்டுமே முதல் சுற்றைத் தாண்டியது. இந்த வட்டாரத்துக்கான தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சிங்கப்பூர் இன்றுவரை தங்கம் வென்றதில்லை.
தென்கிழக்காசிய தேசிய காற்பந்து அணிகளுக்கான ஆசியான் காற்பந்துச் சம்மேளனம் (ஏஎஃப்எஃப்) போட்டியில் நிலைமை பரவாயில்லை. மூன்று முறை கிண்ணத்தை வென்றுள்ளது சிங்கப்பூர்.
இருந்தாலும், அதிலும் வெற்றிவாகை சூடி 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த ஐந்து போட்டிகளில் ஒருமுறை மட்டுமே சிங்கப்பூர் முதல் சுற்றைத் தாண்டியது.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காததே இதற்குக் காரணம் என்பது ரசிகர்கள், விமர்சகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் கருத்து. சங்கத்தை மட்டும் குறை சொல்லமுடியுமா?
இளம் வயதில் நானும் சக நண்பர்களும் கூடைப்பந்துத் திடல், புல்வெளி எனப் பல இடங்களில் அடிக்கடி காற்பந்து விளையாடுவோம்.
புல்வெளியில் விளையாடும்போது எங்களிடம் இருக்கும் பொருள்களைக் கொண்டு கோல் கம்பங்களை உருவாக்குவோம்.
கைவசம் பந்து இல்லாவிட்டாலும்கூட அருகில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக் பந்துகளை வாங்கிப் பலர் விளையாடுவர். டென்னிஸ், மேசைப்பந்து இருந்தால்கூட போதும். அவ்வளவு ஆர்வம் காற்பந்தின்மீது. அந்தக் கலாசாரம் இன்னமும் இருக்கிறதா?
மாறிவரும் வாழ்க்கைச்சூழலும் சிங்கப்பூர் நவீனமடைந்துள்ளதும் மக்களின் போக்கு மாறியதற்குக் காரணங்கள் என்று கூறப்படுவதுண்டு. அப்படிப் பார்த்தால் சிங்கப்பூரைப் போல் நவீனமடைந்துள்ள நாடுகளின் தேசிய அணிகளில் திறமைக்குப் பஞ்சம் இல்லையே.
சிங்கப்பூரின் மக்கள்தொகை குறைவு என்பதையும் காரணமாகச் சொல்லமுடியாது.
400,000க்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட ஐஸ்லாந்து உலகக் கிண்ண, யூரோ கிண்ணப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுவிட்டது. பல சிறப்பான விளையாட்டாளர்கள் உள்ள உருகுவேயின் மக்கள்தொகை நான்கு மில்லியனுக்கும் குறைவு.
டென்மார்க், நார்வே, பின்லாந்து போன்றவற்றுக்கும் சிங்கப்பூருக்கும் மக்கள்தொகையில் அதிக வித்தியாசம் கிடையாது.
சமூக அளவில் காற்பந்து மோகம் பெரிய அளவில் குறைந்திருப்பதே இந்த அவல நிலைக்குக் காரணம் என இவ்வாண்டு தொடக்கத்தில் சிங்கப்பூரின் காற்பந்து நிலைமையை அலசிய ‘முரசு காப்பிக் கடை’ வலையொளி அங்கத்தில் பங்கேற்ற சிலர் குறிப்பிட்டனர்.
முன்பிருந்ததைப் போல் சமூக ரீதியில் பல சிறிய அளவிலான காற்பந்துப் போட்டிகளை மறுபடியும் உருவாக்குவது மீண்டும் அவ்விளையாட்டு மீதான ஆர்வத்தைத் தூண்டும் என்றார் பங்கேற்பாளர்களில் ஒருவரான முன்னாள் சிங்கப்பூர் காற்பந்து நட்சத்திரம் வி. கணேசன்.
மக்களிடையே அதிக ஈடுபாடு இருக்கும்போதுதான் சமூகத்தில் திறமையான இளம் விளையாட்டாளர்கள் உருவெடுப்பர் என்றும் வலையொளி அங்கத்தில் கூறப்பட்டது.
சமூக அளவில் காற்பந்துச் சூழலை மேம்படுத்த 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது ‘அன்லீஷ் தி ரோர்’ திட்டம். அதைப் பற்றிப் பலருக்குத் தெரியாமல் இருப்பது வருத்தம்.
வெளிநாடுகளில் வாழும் திறமையான சிங்கப்பூர் வம்சாவளி விளையாட்டாளர்களைக் களமிறக்குவது சிறிது காலத்துக்காவது விடிவுகாலம் வழங்கும் என்ற கருத்தையும் அண்மையில் சில தரப்பினர் முன்வைத்தனர்.
விளையாட்டாளர்கள் வளர்ந்த நாட்டைப் பிரதிநிதிப்பதற்குப் பதிலாக முன்னோர்களின் நாட்டிற்கு விளையாட வகைசெய்ய அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் சில ஆண்டுகளுக்கு முன்பு விதிமுறைகளில் மாற்றம் செய்தது. குறிப்பாக செனகல், மொரோக்கோ போன்ற பல ஆப்பிரிக்க நாடுகள் அதனால் பலனடைந்துள்ளன.
எனினும், அதற்கு முன்னரே அவை உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தன; ஆப்பிரிக்கக் கண்டத்தில் முத்திரை பதித்திருந்தன.
சிங்கப்பூரில் காற்பந்துக்கான கட்டமைப்பு சரியாக இல்லை, அதனால்தான் போதுமான திறமையான விளையாட்டாளர்கள் இங்கு உருவாவதில்லை என்று பலர் கூறியுள்ளனர்.
பிரச்சினைக்கான அடிப்படைக் காரணத்தை அறிய முற்படவேண்டும். பின்னர் நிலைமையைச் சீராக்கவேண்டும். அதற்குப் பிறகே வளர்ச்சி.
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் படகை மூழ்காமல் பார்த்துக்கொண்ட பிறகே அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவேண்டும். இதுதான் சிங்கப்பூர் காற்பந்து அணியின் தற்போதைய நிலை.
இல்லாவிடில், காற்பந்துக்குப் பதிலாக மற்ற விளையாட்டுகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுத்து அதற்கு ஏற்றவாறு செயல்படலாம்.
அதேவேளை, உலகளவில் ஆகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக இருக்கும் காற்பந்தில் சிங்கப்பூர் சொல்லிக்கொள்ளும் அளவுக்காவது விளையாடவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.
அதனால், காற்பந்தாட்டத்தை வெறும் விளையாட்டாக அணுகாமல், அதில் உச்சத்தில் இருக்கும் நாடுகளின் அணுகுமுறைகளை ஆராய்ந்து, சிறுவயதிலேயே திறனாளர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பட்டைதீட்டினால் காற்பந்தாட்டத்தில் சிங்கப்பூர் மின்னும் காலம் வரும்.