இந்தியாவில் பணம் தொடர்பான பரபரப்பு, பதைபதைப்பு மீண்டும் கிளம்பி இருக்கிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் அறிமுகமான ரூ.2000 நோட்டுகள் மீட்டுக்கொள்ளப்படுவதாக அந்நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
உலகிலேயே ஆக அதிக மக்கள் வசிக்கின்ற, பெரும் பொருளியல்களில் ஒன்றான இந்தியாவில் அண்மைய காலத்தில் பணம் தொடர்பான எந்த ஓர் அரசாங்க அறிவிப்பும் பீதியைக் கிளப்புவதாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கள்ளப் பணத்தை ஒழிப்பது, ஊழலை ஒழிப்பது, பயங்கரவாதிகளுக்குப் பணம் போவதைத் தடுப்பது ஆகிய மூன்று நோக்கங்களுக்காக என்று சொல்லி, புழக்கத்தில் அதிகமாக இருந்து வந்த ரூ.500. ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று 2016 நவம்பர் 8ஆம் தேதி இரவு திடீரென்று ஓர் அறிவிப்பு விடுத்தார்.
பொழுது விடிந்ததும் அந்த அறிவிப்பு நாட்டில் புயலைக் கிளப்பியது.
பணமதிப்பு இழப்பிற்கு முன்னதாக 2016 நவம்பர் 4ஆம் தேதி வாக்கில் இந்தியப் பணச் சந்தையில் மொத்தம் 17.97லட்சம் கோடி நோட்டுகள் புழங்கின. அவற்றில் 86.4% நோட்டுகள் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக இருந்தன. ரூ.500, ரூ.2000 ஆகிய புதுவடிவ நோட்டுகள் 2016 நவம்பர் 11 ஆம் தேதி வங்கிகளில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இவ்வளவு அதிகம் புழக்கத்தில் இருந்த அந்த நோட்டுகள் திடீரென்று செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. பணத்தை மாற்ற போதிய கால அவசாகம் இல்லாமல் போனதாலும் ஏடிஎம்மில் பணம் எடுக்க வரம்பு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியதாயிற்று.
பணத்தை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் 100க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டதாகவும் பொருளியலுக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது; சிறிய, நடுத்தர நிறுவனங்கள் முடங்கிவிட்டன; ஏராளமான மக்கள் வேலை இழந்துவிட்டனர் என்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன, போராட்டங்களில் குதித்தன.
என்றாலும் அந்த நடவடிக்கை வெற்றிதான் என்று மத்திய அரசாங்கம் அப்போது தெரிவித்தது.
அதிக அளவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திடீரென்று செல்லாதவையாகிவிட்டதால் இந்தியப் பொருளியலுக்குத் தேவைப்படக்கூடிய அளவுக்கு நாணயப் புழக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது.
மதிப்பு இழக்கப்பட்ட நோட்டுகளுக்குப் பதிலாக போதிய ரூ 500 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த உடனேயே ரூ.2000 நோட்டுகள் வெளியிடப்பட்டதன் நோக்கம் நிறைவேறிவிட்டதாக பிறகு தெரிவிக்கப்பட்டது.
இனி ரூ.2000 நோட்டுகள் அவ்வளவாகத் தேவைப்படமாட்டா என்றும் அப்போது எதிர்பார்க்கப்பட்டது. அதனை அடுத்து 2018-2019ஆம் ஆண்டில் ரூ.2000 பணத்தை அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. ரூ.2000 நோட்டுகளில் சுமார் 89% நோட்டுகள் 2017 மார்ச்சுக்கு முன்னதாக வெளியிடப்பட்டவை.
புழக்கத்தில் இருந்த அந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு 2018 மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி ரூ.6.73 லட்சம் கோடி என்று அறிவிக்கப்பட்டது. (புழக்கத்தில் இருந்த மொத்த நோட்டுகளில் 37.3%). அந்த மதிப்பு, 2023 மார்ச் 31 நிலவரப்படி ரூ.3.62 லட்சம் கோடியாகக் (10.8%) குறைந்துவிட்டது.
ரூ.2000 நோட்டு கொடுக்கல் வாங்கல்களில் அவ்வளவாகப் புழங்கவில்லை. அதன் புழக்கம் குறைந்துவிட்டது. ஏடிஎம் இயந்திரங்களில் அந்த நோட்டு கிடைப்பதும் இல்லை.
இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு இதர நோட்டுகள் உள்ளன.
ரூ.2000 நோட்டுகளை வெளியிடு வது என்பது தற்காலிக ஏற்பாடுதான், அதன் ஆயுள் அநேகமாக 4 முதல் 5 ஆண்டுகள்தான் இருக்கும் என்றும் அப்போது தெரிவித்த மத்திய வங்கி, வந்த வேலை முடிந்துவிட்டதால் அவை மீட்டுக்கொள்ளப்படுவதாக இப்போது அறிவித்துள்ளது.
மக்கள் தங்களிடம் இருக்குக்கூடிய அந்த நோட்டுகளை இந்த மாதம் 23ஆம் தேதி முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிவரை வங்கிகளில் அல்லது மத்திய வங்கியின் 19 கிளைகளில் எங்கு வேண்டுமானாலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். ஒரு நேரத்தில் பத்து நோட்டுகளைக் கொடுத்து ரூ.20,000 பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது தங்களிடம் எவ்வளவு 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தாலும் அவற்றைக் கணக்கில் போடலாம் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.
பணமதிப்பு இழப்பு நடவடிக்கை இடம்பெற்றபோது இருந்த நிலவரங்கள் போல் இப்போது இல்லை.
வரும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் ரூ.2000 நோட்டுக்கு மதிப்பு இருக்கும். அவை செல்லுபடியாகும் என்று இப்போது மத்திய வங்கி அறிவித்து இருப்பது பலருக்கும் நிம்மதி பெருமூச்சுவிட வைத்துள்ளது.
இந்தியாவின் அதிக வளர்ச்சி உள்ள, ஆகஅதிக ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படுகின்ற தமிழ்நாட்டில் ரூ.2000 மீட்டுக்கொள்ளப்படுவதால் சாமானிய மக்களுக்குப் பாதிப்பு இல்லை என்றும் அந்தப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்போரே பயப்படவேண்டும் என்றும் பலரும் கூறுகிறார்கள்.
இதனால் வங்கிகளுக்குப் பண வரத்து அதிகரிக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். அதிகமாகப் புழங்கும் நோட்டுகளிலேயே ஆக அதிக மதிப் புள்ள பணம் ரூ.500 நோட்டுதான்.
ஆகையால் ரூ.1000 நோட்டுகளை வெளியிட்டால் வசதியாக இருக்கும் என்று வியாபாரிகள் சிலர் கருதுகிறார்கள். ரூ.200 நோட்டை அச்சிட ரூ2.93; ரூ.500 நோட்டை அச்சிட ரூ.2.94; ரூ.2000 நோட்டை அச்சிட ரூ.3.54 செலவாகிறது என்று மத்திய வங்கி ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கிறது.
செலவைப் பார்க்கும்போது இப்போதைக்கு இது தாங்காது; மின்னிலக்க நாயணப் புழக்கம் அதிகமாகி வருவதால் அரசு இதில் அவசரம் காட்டாது என்று சிலர் கருதுகிறார்கள்.
எது எப்படி இருந்தாலும் எந்த ஒரு முடிவையும் நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கும் மக்களுக்கும் பாதிப்பு வராத வகையில் அரசாங்கம் எடுக்கும்; எடுக்க வேண்டும் என்பதே எல்லாரின் விருப்பம்.