தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு அளித்த முதல் வருகை சிங்கப்பூருக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பழமையான உறவை மீண்டும் மறுவுறுதிப்படுத்தியுள்ளது.
அவரது இரு நாள் (மே 24, 25) அதிகாரத்துவப் பயணத்தின் முழு கவனமும் தமிழ்நாட்டின் தொழில்துறையை மேம்படுத்துவதிலும் முதலீடுகளை ஈர்ப்பதிலும் இருந்தது. அதேவேளையில் தொப்புள்கொடி உறவால் இணைக்கப்பட்டுள்ள சிங்கப்பூர்த் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்து இருக்கிறார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இருநாட்டு வர்த்தக ஒப்பந்தம் என பல்வேறு இணைப்புகள் இருந்தாலும் தமிழ்நாட்டு அரசே நேரில் வந்து முதலீடுகளை ஈர்க்க முயற்சிகளை முடுக்கி விட்டது பல ஆண்டுகளில் காணாத ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
முதல்வர் வருகையின்போது பொருளியல் உறவுகளை மேலும் வலுப்படுத்த பல உடன்பாடுகள் கையெழுத்தாயின.
இந்தியாவின் பல மாநிலங்களில் வர்த்தக, முதலீட்டு உறவுகளைச் சிங்கப்பூர் வலுப்படுத்தி வந்துள்ளது.
அண்மையில் உத்திரப்பிரதேசத்தில் பல உடன்பாடுகளைச் சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. அதற்கு முன்னரே குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துவருகின்றன.
இந்தத் தருணத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தித்தரும் பயணமாக அவரின் பயணம் அமையும்; வர்த்தக, தொழில் உறவுகள் மேலோங்க, பொருளியல் நோக்கில் தமிழ்மொழியைப் புழங்க, வளர்க்க, கற்க மேலும் வாய்ப்பு வசதி கள் உருவாகும் என்று நம்பலாம்.
தமிழ்மொழியை ஆட்சிமொழியாகக் கொண்டிருப்பதால் சிங்கப்பூரை ஒரு வெளிநாடாக நாங்கள் கருதுவதில்லை என்று சிங்கப்பூர் இந்தியர் வர்த்தகத் தொழில் சபை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதைப் போலவே சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்களும் அதன் நிர்வாகிகளும் மொழிப் பாலத்தால் உறவுப் பிடிமானத்தை மேலும் இறுக்கிப் பிடித்துக்கொள்ள வாய்ப்பும் உள்ளது.
வளம் பெற்ற தமிழ்நாட்டில் உத்திபூர்வ வகையில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக முதல்வரைச் சந்தித்த சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சருமான எஸ்.ஈஸ்வரன், இந்திய முதலீட்டின் சிறந்த நுழைவாயிலாகத் தமிழ்நாடு இருக்கும் என்றார்.
சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் முதல்வரை வரவேற்க நடந்த நிகழ்ச்சியில் மட்டுமல்லாமல் மறுநாளும் திரு ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். திரு ஸ்டாலின் வருகை பொருளியல் ரீதியில் சிங்கப்பூருக்கும் கலாசார, சமூக ரீதியில் சிங்கப்பூர்த் தமிழருக்கும் மிகவும் ஊக்குவிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
எந்த நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எந்த இன மக்களுக்கும் பூர்வீகத்தில் நாட்டம் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் தமிழ் மக்களுடன் தமிழ் மொழியுடன்கூடிய தொடர்பை மேலும் வலுப்படுத்த தமிழகத்துடனான தொடர்பு கைகொடுக்கும்.
நவீன தொழில்நுட்பத்தால் தொடர்புத்துறை மிகவும் விரிவடைந்துவிட்டது. அது மேலும் வளரவே செய்யும். தமிழக முதல்வரிடம் சிங்கப்பூர்த் தமிழர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
மதுரைக்கும் சிங்கப்பூருக்கும் இடை யிலான நேரடி விமானத் தொடர்பு அதில் முதன்மையானது. அந்தக் கோரிக்கை நிறைவேற பாடுபடப்போவதாக முதல்வர் உறுதி தெரிவித்துள்ளார்.
கலாசார, மொழி இணைப்பு-மேம்பாட்டுக்கான திட்டங்கள், இங்கு வாழும் தமிழக ஊழியர் மேம்பாட்டுக்கான திட்டங்கள் என பலவற்றையும் ஸ்டாலின் செய்து முடிப்பார் என்று நம்புவோம்.
மேல்நிலைக் கல்வி சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் உட்பட முதல்வர் வருகையின்போது ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
முதல்வர், பெரும் நிறுவனங்களுடன் சந்திப்புகளை நடத்தினார். தமிழ்நாட்டின் சிறந்த பங்காளியாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
ஏற்றுமதியைச் சார்ந்து இருக்கும் சிங்கப்பூர் உலகத்தோடு ஒன்றியிருக்கும் நாடு. அந்த ஒன்றிணைப்பில் தமிழகத்தையும் சிங்கப்பூர் வலுவாகச் சேர்ந்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புகிறார்.
தமிழகத்தின் தலைநகர் சென்னை யில் வரும் ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் கலந்துகொள்ள ஊக்கமூட்டும் வகையில் முதல்வரின் பயணம் அமைந்திருக்கும் என்று நம்பலாம்.
சிங்கப்பூரை நிறுவிய தலைவர் லீ குவான் இயூவிற்குத் தமிழ்நாட்டில் நினைவுச்சின்னம் அமைக்கப்படும்;
அவர் பெயரில் நூலகம் அமையும் என்று முதல்வர் அறிவித்தார்.
அத்தகைய நினைவுச்சின்னம் சிங்கப்பூருக்கும் தமிழகம் மற்றும் இந்தியாவுக்கான உணர்வுபூர்வமான தொடர்பு மேலும் அதிகமாக ஓர் ஊக்குவிப்பாக இருக்கும். தமிழ் நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள இணைப்பில் அது மேலும் வலு சேர்க்கும். லீ குவான் இயூ பெயரில் அமைக்கப்படும் நூலகம் பலருக்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும்.
அந்த நூலகத்திலும் தமிழகத்தின் மற்ற நூலகங்களிலும் சிங்கப்பூரைப் பற்றியும் இந்நாட்டு வரலாறு, மக்கள், வாழ்க்கை, பண்பாடு பற்றிக்கூறும் பல மொழி நூல்கள், குறிப்பாக ஆங்கில நூல்களும் இடம்பெற வேண்டும்.
மாணவர் பரிமாற்றத் திட்டம் பற்றியும் முதல்வர் அறிவித்தார். அத்திட்டத்தில் சிங்கப்பூரின் பல இன மாணவர்களும் கலந்துகொண்டு தமிழ்நாட்டின் சிறப்புகளை, வளர்ச்சி வாய்ப்புகளை அறியவும் அதேபோல் தமிழக மாணவர்கள் சிங்கப்பூரில் இருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளவும் ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
சிங்கப்பூரின் பன்முகத்தன்மையை, சிறப்பு இயல்புகளை மனதில் கொண்டு தமிழகம் செயல்படட்டும்;
இரு தரப்பு பொருளியல், மொழி, பண்பாட்டு உறவுகள் புதிய உச்சத்தை எட்டட்டும். அதற்கு முதல்வர் வருகை உரமாகட்டும்.