உலகிலேயே அதிக பாடல்களைப் பாடியவர் என்று கின்னஸில் இடம்பெற்ற பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்களுக்கு புத்தர் சிலையை பரிசளித்தார் கவிஞர் வைரமுத்து. அப்போது அவருக்கு வாழ்த்து சொன்ன வைரமுத்து, உலக சாதனைப் பதிவேட்டில் பாடகி பி.சுசீலா அம்மையார் அவர்கள் இடம்பெற்றிருப்பது, அவருக்கு மட்டும் பெருமை அல்ல, உலகத்திலேயே அதிகமான பாடல்களைப் பாடிய பாடகி இந்தியாவில் இருக்கிறார் என்பதால் அது இந்தியாவிற்கே பெருமை. "1953ல் தனது முதல் பாடலைப் பாடினார். மேலும் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம் மற்றும் ஒரியா ஆகிய 7 மொழிகளிலும் பாடும் திறன் பெற்றவர்.
அவரது தமிழ்ப் பாடல்களில் உள்ள உச்சரிப்பின் துல்லியம், தமிழின் மேன்மை, சொற்களின் சுத்தம் ஆகியவை அவருக்கு மட்டுமே உரியது. "இவரின் குரல் இல்லையென்றால் பல பேருக்குக் காயங்கள் ஆறி இருக்காது. பலரது கண்ணீரைத் துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரை காதலிக்க வைத்த குரல், பலரது சண்டைகளைத் தீர்த்து வைத்த குரல், பல மேடைகளில் தாலாட்டிய குரல், சுசீலா அம்மையாரின் குரல்.
சுசீலா அம்மையாரின் தலைமுறை தாண்டிய குரலுக்கு எனது தலைவணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் அவர். வைரமுத்து பரிசளித்த புத்தர் சிலையைப் பற்றிப் பேசிய சுசீலா அம்மையார் அவர்கள், "சில நாட்களுக்கு முன் சிலோனுக்கு என்னை அழைத்து அங்கு கம்பன் விருது கொடுத்துக் கௌரவித்தனர். அந்நேரத்தில் ஒரு வீட்டின் வாசலில் புத்தர் சிலையைக் கண்டு அதை என் வீட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று விரும்பி னேன்.